கிராமங்களில் தங்கி மக்கள் குறைகளை கேட்ட தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள்

சென்னை: தமிழக காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் தங்கி, அங்குள்ள மக்களின் பிரச்னைகளை கேட்டறிந்தனர்.

தமிழக காங்கிரசில், மாவட்ட தலைவர்களுக்கான 10 நாள் பயிற்சி முகாம், சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில், கடந்த 23ல் தொடங்கியது. பயிற்சி முகாமின் நிறைவு நாளான வரும் ஆக., 1ம் தேதி, லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் பங்கேற்று பேசுகிறார்.

முகாமின் ஒரு பகுதியாக, காங்., மாவட்ட தலைவர்கள் அனைவரும், நேற்று முன்தினம், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கிராமங்களில், ஒரு நாள் தங்கினர்.

தாழம்பேடு, கீரப்பாக்கம், சோகண்டி உள்ளிட்ட 20க்கும் அதிகமான கிராமங்களில், தலா நான்கு பேர் வீதம் இரவில் தங்கிய அவர்கள், அங்குள்ள மக்களின் குறைகளை கேட்டனர்.

கிராம மக்களின் வாழ்வாதாரம் குறித்தும், மத்திய அரசு அறிவித்து நிறைவேற்றாத திட்டங்கள் குறித்தும் கேட்டறிந்தனர். மேலும், கிராம மக்கள் வழங்கிய, இரவு உணவை சாப்பிட்டனர்.

இதையடுத்து, கிராம மக்களின் தேவைகள் மற்றும் கோரிக்கைகளை அறிக்கையாக தயாரித்து, ராகுலின் செயலர் சச்சின் ராவிடம் வழங்க உள்ளனர்.

கிராம அளவில் காங்., வளர்ச்சி குறித்தும், கட்சியின் அடிமட்ட அளவில், மாவட்ட தலைவர்கள் மேற்கொள்ள வேண்டிய களப்பணிகள் குறித்தும் தமிழக காங்., முன்னாள் தலைவர் அழகிரி, முன்னாள் எம்.பி., பீட்டர் அல்போன்ஸ் ஆகியோர், பயிற்சி முகாமில் பேசினர்.

Advertisement