சர்வதேச போட்டிகளில் இருந்து இந்திய கிரிக்கெட் வீரர் ரஹானே ஓய்வு

2

மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், வீரருமான அஜின்கிய ரஹானே, சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்கள வீரர்களில் ஒருவராக திகழ்ந்து வந்த ரஹானே, கடந்த சில ஆண்டுகளாக அணியில் இடம் கிடைக்கவில்லை. இருப்பினும் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் விளையாடி வந்தார். அதில், கோல்கத்தா அணியின் கேப்டனாக செயல்பட்டார். அவரது தலைமையில் கோல்கத்தா அணி புள்ளிப்பட்டியலில் 7வது இடத்தை பிடித்து தொடரில் இருந்து வெளியேறியது.

38 வயதான ரஹானே கடைசியாக, 2023ம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸூக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்காக விளையாடியிருந்தார். இந்த நிலையில், சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு அவர் அறிவித்துள்ளார். இது தொடர்பாக வீடியோ வெளியிட்டிருந்த அவர், தனது ஓய்வு குறித்து கண்ணீருடன் உருக்கமாக பேசியுள்ளார்.

அதில் அவர் பேசியிருப்பதாவது; எல்லாவற்றிற்கும் ஒரு தொடக்கமும், ஒரு முடிவும் இருக்கிறது. நேரம் வரும்போது, அதை நாம் மதித்து முன்னேற வேண்டும். எனது பேட்டிங்கில் நான் எப்போதும் சரியான நேரத்தை நம்பியிருக்கிறேன். அதன் முக்கியத்துவத்தையும் புரிந்து கொண்டிருக்கிறேன். இன்று, நான் சர்வதேச கிரிக்கெட் மற்றும் அனைத்து வகையான போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுகிறேன். அடுத்த கட்டத்திற்குச் செல்ல சரியான நேரம் வந்துவிட்டதை உணர்கிறேன்.

நான் முழு நேர்மையுடன் இந்த விளையாட்டை விளையாடினேன். உங்கள் நோக்கம் சரியாக இருந்தால், இந்த விளையாட்டு எப்போதும் உங்களைப் பார்த்துக்கொள்ளும் என்று நான் எப்போதும் நம்புகிறேன். ஒவ்வொரு ஏற்ற இறக்கத்தின்போதும் எனக்கு ஆதரவளித்த அனைத்து கிரிக்கெட் ரசிகர்களுக்கும் எனது நன்றி. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

ரஹானே இந்திய அணிக்காக 85 டெஸ்ட், 90 ஒருநாள் போட்டிகள் மற்றும் 20 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். ஒட்டுமொத்தமாக அவர் 8,414 சர்வதேச ரன் குவித்துள்ளார். அதேபோல, 6 அணிகளுக்காக 212 பிரீமியர் லீக் போட்டிகளிலும் பங்கேற்றுள்ளார். இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக 6 போட்டிகளில் செயல்பட்டுள்ளார். அதில், 4ல் வெற்றி கண்டுள்ளார். இரண்டை டிரா செய்துள்ளார். 2020-21ம் ஆண்டு இவரது தலைமையில் ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி இந்திய அணி தொடரைக் கைப்பற்றியது.


மறக்க முடியாத ஆட்டம்

2021ம் ஆண்டு பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரில் பங்கேற்பதற்காக, கோலி தலைமையிலான இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டது. அந்தத் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி 36 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. அதன்பிறகு, கோலி தாயகம் திரும்பிய நிலையில், கேப்டன் பொறுப்பை ஏற்ற ரஹானே, ஆஸ்திரேலியாவை 2-1 என்ற கணக்கில் வீழ்த்தி தொடரை வென்றார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்தத் தொடரில் இந்திய வீரர்கள் தடுமாறிய போதும், தனது அசாத்திய ஆட்டத்தால் சதம் அடித்து, மறக்க முடியாத ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார் ரஹானே.

Advertisement