பி.எப்., சம்பள வரம்பு ரூ.25,000 ஆக உயர வாய்ப்பு; ஒரு கோடிக்கும் மேற்பட்டோர் பயன்பெறலாம்

பணியாளர் வருங்கால வைப்பு நிதி (பி.எப்.,) திட்டத்தில் கட்டாயமாக சேர்வதற்கான மாதாந்திர அடிப்படை சம்பள வரம்பை தற்போதைய 15,000 ரூபாயில் இருந்து 25,000 ரூபாயாக உயர்த்த மத்திய நிதி அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 10 ஆண்டு களுக்கும் மேலாக மாற்றமின்றி இருந்து வந்த இந்த வரம்பு உயர்த்தப்பட்டால், ஒரு கோடிக்கும் மேற்பட்ட கூடுதல் பணியாளர்கள் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் வருவார்கள் என தொழிலாளர் அமைச்சகத்தின் உள்மதிப்பீடு தெரிவிக்கிறது.

தற்போதைய விதிகளின்படி, மாதம் 15 ஆயிரம் ரூபாய் வரை அடிப்படை சம்பளம் பெறுவோர் பணியாளர் வருங்கால வைப்பு நிதி மற்றும் பணியாளர் ஓய்வூதியத் திட்டத்திலும் கட்டாயமாக சேர வேண்டும்.

இதற்கு மேல் சம்பளம் பெறுவோர் விருப்பத்தின் பேரில் சேரலாம். 20 அல்லது அதற்கு மேற்பட்ட பணியாளர்கள் பணிபுரியும் நிறுவனங்களில் இந்த விதி கட்டாயமாக அமல்படுத்தப்படுகிறது.

தற்போது 15,000 ரூபாய் சம்பள வரம்பின் அடிப்படையில், பணியாளர் 12 சதவீதமாக 1,800 ரூபாய் பங்களிப்பு செய்கிறார். நிறுவனமும் அதே அளவு பங்களிப்பை வழங்குகிறது. இதில், 3.67 சதவீதம் பி.எப்., கணக்கிலும், 8.33 சதவீதம் பணியாளர் ஓய்வூதியத் திட்டத்திலும் செலுத்தப்படுகிறது.

சம்பள வரம்பு 25,000 ரூபாயாக உயர்த்தப்பட்டால், பணியாளரின் மாதாந்திர பி.எப்., பங்களிப்பு 3,000 ரூபாயாக அதிகரிக்கும். நிறுவனமும் அதே அளவு பங்களிப்பு செய்ய வேண்டியிருக்கும். இதன் வாயிலாக, பணியாளரின் பி.எப்., சேமிப்பும், ஓய்வூதிய நிதிக்கான பங்களிப்பும் அதிகரித்து, நீண்டகால சமூக பாதுகாப்பு வலுப்பெறும்.

எனினும், இந்த மாற்றத்தால் பணியாளர்கள் கையில் பெறும் மாதச் சம்பளம் ஓரளவு குறையலாம். அதே நேரத்தில், மத்திய, மாநில அரசுகள் மற்றும் தனியார் நிறுவனங்களின் ஊதியச் செலவும் அதிகரிக்கும் என எதிர் பார்க்கப்படுகிறது.

இந்த வரம்பு உயர்வுக்கு அடுத்தகட்டமாக மத்திய அமைச்சரவையின் ஒப்புதல் பெறப்பட வேண்டும். அதன் பின்னர் நிர்வாக மற்றும் தொழில்நுட்ப ஏற்பாடுகள் நிறைவடைந்த பிறகே புதிய விதிமுறை அமலுக்கு வரும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisement