திருமணமின்றி சேர்ந்து வாழும் ஜோடிக்கும் சட்ட நிவாரணம்

10

புதுடில்லி: 'திருமணம் செய்து கொள்ளாமல், கணவன் - மனைவி போல உறவில் இருக்கும் பெண்களுக்கும் குடும்ப வன்முறை தடுப்பு சட்டப் பாதுகாப்பு பொருந்தும்' என, உச்ச நீதிமன்றம் மிக முக்கியமான உத்தரவை பிறப்பித்துள்ளது.

கர்நாடகாவைச் சேர்ந்த டாக்டர் லோகேஷ் என்பவர், முதல் திருமணம் நடந்ததை மறைத்து, வேறொரு பெண்ணுடன் 'லிவ் - இன்' எனப்படும் திருமணம் செய்யாமல் கணவன் - மனைவி போன்ற உறவில் வாழ்ந்து வந்துள்ளார்.

அந்த பெண், லோகேஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது வரதட்சணை கொடுமை, சித்ரவதை மற்றும் தீ வைத்து கொலை செய்ய முயற்சித்தல் என, அடுக்கடுக்கான கொடுமைகளை சந்தித்து வந்ததாக, குடும்ப வன்முறை தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசில் புகார் அளித்தார்.

இதை விசாரித்த கர்நாடக உயர் நீதிமன்றம், 'குடும்ப வன்முறை சட்டப் பிரிவு 498ஏ, ரத்தாகாத திருமணம் அல்லது விவாகரத்து ஆன திருமணம் இரண்டுக்கும் பொருந்தும். அதே போல, 'லிவ்-இன்' முறையில் வாழும் பெண்களுக்கும் இந்த சட்டப்பிரிவு பாதுகாப்பு அளிக்கும்' என தீர்ப்பளித்தது.

இதனை எதிர்த்து லோகேஷ் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சய் கரோல், நாங்மேகாபம் கோட்டீஸ்வர் சிங் அடங்கிய அமர்வு, உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்தது. எனினும், இந்த சட்டப்பிரிவு பயன்படுத்துவது குறித்து சில கட்டுப்பாடுகளையும் விதித்தது.

அனைத்து வகை 'லிவ்-இன்' உறவுகளுக்கும் இது தானாகப் பொருந்தாது. பரஸ்பரம் திருமணம் செய்துகொள்ளும் எண்ணத்தோடு, கணவன்- -- மனைவி போன்ற சமூக மற்றும் குடும்ப அமைப்பில் வாழும் பெண்களுக்கு மட்டுமே இச்சட்டப் பாதுகாப்பு நீட்டிக்கப்படுகிறது என, உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Advertisement