அமெரிக்க அதிபர் டிரம்ப் நிதி திரட்டும் நிகழ்ச்சி; ஆயுதங்களுடன் நோட்டமிட்ட நபர் கைது

வாஷிங்டன்: லாஸ் ஏஞ்சலஸில் அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் கோல்ப் மைதானத்தில் துப்பாக்கி மற்றும் ஆயுதங்களுடன் சுற்றித் திரிந்த நபரை போலீசார் கைது செய்தனர்.

கடந்த 2024ம் ஆண்டு ஜூலை 13ம் தேதி பென்சில்வேனியில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் டிரம்ப் பேசிக் கொண்டிருந்த போது நடத்தப்பட்ட துப்பாக்கச்சூட்டில், அவரது காதில் காயம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, புளோரிடாவில் கோல் விளையாடிக் கொண்டிருந்த போது, டிரம்ப் மீது துப்பாக்கிச்சூடு நடத்துவதற்காக, மறைந்திருந்த நபர் பிடிபட்டார்.

அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற பிறகு, அவருக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதால், போலீசார் கூடுதல் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், அதிபர் டிரம்ப் பங்கேற்கவிருந்த நிதிதிரட்டும் நிகழ்ச்சிக்கு 2 நாட்களே உள்ள நிலையில், லாஸ் ஏஞ்சலஸ் பகுதியில் உள்ள அவரது கோல்ப் மைதானத்தின் பாதுகாப்பு ஏற்பாடுகளை மர்ம நபர் ஒருவர் நோட்டமிட்டுள்ளார். மைதானத்தை போட்டோ மற்றும் வீடியோ எடுத்துக் கொண்டிருந்த அந்த நபரை பிடித்து போலீசார் விசாரித்தனர்.

அப்போது, அந்த நபரின் பெயர் ஜானின் ஜான் டேலே என்பதும், டவுனி நகரத்தைச் சேர்ந்தவர் எனவும் தெரிய வந்துள்ளது. மேலும், அவரது பாக்கெட்டில் துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் இருந்தன. அவற்றை பறிமுதல் செய்த போலீசார், அவரது வீட்டில் சோதனை நடத்தி ஆயுதங்களை கைப்பற்றினர்.

இதைத்தொடர்ந்து, ஜான் டேலேவை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது, தன் மீதான குற்றச்சாட்டுகளை அவர் மறுத்தார். இருப்பினும், சுமார் ரூ.2 கோடி பிணைத்தொகையை செலுத்த உத்தரவிட்டு அவருக்கு நீதிமன்றம் ஜாமின் வழங்கியது.

Advertisement