அமைச்சர்களுக்கு மாவட்ட பொறுப்பு ஒதுக்கீடு மழை சேதம், வறட்சி ஆய்வு செய்ய உத்தரவு

பெங்களூரு: கர்நாடகாவில் புதிதாக பதவியேற்ற அமைச்சர்களுக்கு, மாவட்ட பொறுப்புகளை ஒதுக்கிய முதல்வர் சிவகுமார், வறட்சி பாதித்த பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்து, அறிக்கை தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டுள்ளார்.

கர்நாடகாவில் முதல்வர் சிவகுமார் தலைமையில், நேற்று முன்தினம் புதிதாக, 19 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர். இவர்கள் உட்பட, 30 அமைச்சர்களுக்கான, மாவட்டங்களை முதல்வர் சிவகுமார் அறிவித்து உள்ளார்.

மாநிலத்தின் பல மாவட்டங்களில் மழை அதிகரித்து, வெள்ள பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. மறுபுறம் மழையின்றி வறட்சி ஏற்படும் என்ற அச்சம் உள்ளது.

எனவே, மாவட்ட பொறுப்பு அமைச்சர்கள், அந்தந்த மாவட்டத்தின் ஒவ்வொரு தாலுகாவுக்கும் சென்று, அங்கு நிலவும் மழைபொழிவு நிலவரம், பயிர் சேதம், குடிநீர் பற்றாக்குறை, வறட்சி அறிகுறிகள், பொது மக்களின் துயரத்தை நேரில் ஆய்வு செய்ய வேண்டும்.

இந்த ஆய்வில், மாவட்ட கலெக்டர்கள், தாலுகா அதிகாரிகள், விவசாயிகள், உள்ளூர் மக்கள் பிரதிநிதிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தி, உண்மையான தகவல்களை சேகரிக்க வேண்டும்.

இந்த ஆய்வுக்கு பின், துணை முதல்வர், வருவாய் துறை அமைச்சரிடம், விரிவான அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும். இந்த அறிக்கையின் அடிப்படையில், மாவட்டம் வாரியான நிவாரண நடவடிக்கைகள், பயிர் இழப்பு, குடிநீர் வழங்கல், வெள்ளம் கட்டுப்பாடு, வறட்சி மேலாண்மை தொடர்பான அவசர ஆலோசனைகளை அரசு மேற்கொள்ளும்.

Advertisement