ரயில்வே சரக்கு போக்குவரத்து ஜூலையில் 9 சதவீதம் வளர்ச்சி

சென்னை: ரயில்வேயில் சரக்கு போக்குவரத்து ஒன்பது சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளது, கடந்த மாதத்தில் மட்டும், 14.10 கோடி டன் சரக்குகள் கையாளப்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ரயில்வேயில் கூடுதல் சரக்குகளை கையாளுவது, பார்சல் ரயில்களை இயக்குவது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் பயனாக சரக்கு ரயில் போக்குவரத்து பிரிவில் ஆண்டுதோறும் சராசரியாக 20 சதவீதம் வரையில் வருவாய் அதிகரித்து வருகின்றன.

குறிப்பாக, நிலக்கரி, உரம், சிமென்ட், தானியங்கள் போல், இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களையும் அதிகளவில் அனுப்பி வைத்து, அதன் வாயிலாக வருவாய் அதிகரித்து வருகிறது.
Latest Tamil News
இது குறித்து, தெற்கு ரயில்வே பயனாளர் ஆலோசனை குழு உறுப்பினர் ஜாபர் அலி கூறுகையில், “சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து செலவு குறைவு என்பதால், ரயில்களில் சரக்குகள் கையாளுவது படிப்படியாக அதிகரித்து வருகிறது. நீண்ட காலம் ஒப்பந்த அடிப்படையில் சரக்குகளை கையாளும் நிறுவனங்களுக்கு, கட்டண சலுகையும் அளிக்கப்பட்டு வருகிறது.

“அனல்மின் நிலையங்களில் நிலக்கரி தேவை அதிகரிப்பதையடுத்து, கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் ஒப்பிடுகையில், கடந்த ஜூலை மாதத்தில் மின் நிலையங்களுக்கான உள்நாட்டு நிலக்கரி வினியோகத்தை ரயில்வேயில் 20 சதவீதம் அதிகரித்துள்ளது.

இதேபோல், கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் 62.19 கோடி ஆக இருந்த பயணியர் எண்ணிக்கை, கடந்த மாதத்தில் 63.35 கோடியாக உயர்ந்தது,” என்றார்.

கடந்த ஜூலையில் ரயில்வேயில் 14.10 கோடி டன் சரக்குகள் கையாளப்பட்டுள்ளது கடந்த ஆண்டு ஜூலையுடன், கடந்த மாதத்தை ஒப்பிடும்போது, 9 சதவீதம் வளர்ச்சி

பொருள் பங்களிப்பு (சதவீதம்) இரும்புத் தாது 22.20 நிலக்கரி 11.50 உணவு தானியங்கள் 11.50 உரங்கள் 12 இதர பொருட்கள் 12.10

Advertisement