தொடர் உண்ணாவிரதம்; விவசாயிகள் துவக்கினர்

பொங்கலுார், ஆக. 6–-

கோவை இருகூரில் இருந்து பெங்களூரு தேவனஹள்ளி வரை அமைக்கப்பட்டு வரும் ஐ.டி.பி.எல் எரிவாயு குழாய் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, உரிய இழப்பீடு வழங்க வேண்டும் அல்லது மாற்றுப் பாதையில் குழாய் பதிக்க வேண்டும் என வலியுறுத்தி, பொங்கலுார் அருகே கொசவம்பாளையம் பிரிவு பகுதியில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் நேற்று முதல் தொடர் உண்ணாவிரதம் மற்றும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.



கோவை முதல் நாமக்கல் வரை 70 கி.மீ. துாரத்துக்கு விவசாய நிலங்கள் வழியாக எரிவாயு குழாய் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது. ஏற்கனவே ஒரு குழாய் பதிக்கப்பட்டுள்ள நிலையில், அதே வழித்தடத்தில் மேலும் ஒரு குழாய் பதிக்கப்படுவதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.



விவசாய நிலத்தில் குழாய் பதித்த பிறகு மீதமுள்ள 40 அடி நிலத்தை மீண்டும் விவசாயிகளிடம் ஒப்படைக்க வேண்டும். மேலும், பொங்கலுார் பகுதியில் ஐ.டி.பி.எல். நிறுவனம் ஒரு சென்ட் நிலத்துக்கு 2 லட்சம் ரூபாய் வழங்கியுள்ளதால், அதே அளவிலான இழப்பீட்டை அனைத்து விவசாயிகளுக்கும் வழங்க வேண்டும். தமிழக அரசின் அரசாணை எண் 54/2020-ன்படி வழங்கப்படும் பயிர் இழப்பீட்டை 100 சதவீதம் உயர்த்தி வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.



இந்த கோரிக்கைகளை அரசு ஏற்காவிட்டால், விவசாய நிலங்கள் வழியாக அல்லாமல் சாலையோரம் மாற்றுப் பாதையில் எரிவாயு குழாய் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் தெரிவித்தனர்.

-––

தொடர் உண்ணாவிரதம் மற்றும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள்.

இடம்: பொங்கலுார் அடுத்த கொசவம்பாளையம் பிரிவு

Advertisement