பா.ஜ., செயலாளரிடம் ரூ.50 லட்சம் மோசடி; போலீஸ் சீருடையில் வந்தவர்கள் பறித்ததாக நண்பர் நாடகம்

36

மதுரை: மதுரையில் பா.ஜ., மாநில செயலாளர் ராம.சீனிவாசனிடம் அவரது நண்பர் ரூ.50 லட்சம் மோசடி செய்ததாக வழக்குப்பதிவு செய்யப் பட்டது.

சட்டசபை தேர்தலில் மதுரை தெற்கு தொகுதியில் பா.ஜ., வேட்பாளராக போட்டியிட்டவர் ராம.சீனிவாசன். அச்சமயத்தில் திருப்பாலையில் வீடு ஒன்றை கட்டிக்கொண்டிருந்தார். தேர்தல் பிரசாரத்தில் 'பிஸி'யாக இருந்ததால் கட்டுமான செலவிற்காக பொறியாளரிடம் கொடுக்குமாறு புதுாரைச் சேர்ந்த நண்பர் பூமாறனிடம் ரூ.50 லட்சத்தை சீனிவாசன் கொடுத்து அனுப்பினார்.

அடுத்த சில மணி நேரத்தில் சீனிவாசனை தொடர்பு கொண்ட பூமாறன், 'போலீஸ் சீருடையில் வந்தவர்கள் என்னை தாக்கிவிட்டு பணத்தை பறித்துச்சென்றுவிட்டனர்' என்றார்.

இதன்பிறகு அவரது போன் 'சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டது. சில நாட்களுக்கு பிறகு பூமாறன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதை அறிந்து சீனிவாசன் நேரில் சென்றார்.

அவரிடம் பூமாறன், 'பணத்தை பறித்துக்கொண்ட கும்பல் காரில் கடத்திச் சென்று என்னை ஒரு அறையில் அடைத்தனர். பிறகு காலையில் ஏதோ ஒரு இடத்தில் காரில் இருந்து தள்ளிவிட்டதில் காயம் ஏற்பட்டது' என்றார்.

ஆனால் அவர் நாடகமாடுவதாக மத்திய குற்றப்பிரிவில் சீனிவாசன் புகார் செய்தார். தீவிர விசாரணைக்கு பிறகு, போலீசார் நேற்று முன்தினம் வழக்குப்பதிவு செய்தனர்.

Advertisement