தேர்வாணைய வல்லுநர்களே நீட் வினாத்தாளை கசியவிட்டனர்!

5


புதுடில்லி: 'நீட்' தேர்வு வினாத்தாளை, தேர்வை நடத்திய தேர்வாணைய வல்லுநர்களே கசியவிட்டது, சி.பி.ஐ.,யின் குற்றப்பத்திரிகை வாயிலாக தெரியவந்துள்ளது, ராஜஸ்தான், மஹாராஷ்டிரா உட்பட பல்வேறு மாநிலங்களில் இது தொடர்பாக சதித்திட்டம் தீட்டப்பட்டதும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.


நாடு முழுதும் உள்ள மருத்துவக் கல்லுாரிகளில், இளங்கலை படிப்புகளில் சேர ஆண்டுதோறும் நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது.


டில்லியை தலைமையகமாக வைத்து செயல்படும் என்.டி.ஏ., எனப்படும் தேசிய தேர்வு முகமை, இந்த தேர்வை நடத்துகிறது. இந்தாண்டுக்கான தேர்வு, கடந்த மே 3ல் நடத்தப்பட்டது. மொத்தம் 23 லட்சம் பேர், இளநிலை நீட் தேர்வை எழுதினர்.

தேர்வுக்கு முன்னதாகவே, அதற்கான வினாத்தாள் கசிந்ததாக புகார் வந்ததை அடுத்து, 3ம் தேதி நடந்த தேர்வு ரத்து செய்யப்பட்டு, மறுதேர்வு ஜூன் 21ல் நடத்தப்பட்டது.

குற்றப்பத்திரிகை



வினாத்தாள் கசிவு தொடர்பாக என்.டி.ஏ., அளித்த புகாரை தொடர்ந்து, வினாத்தாள் தயாரிப்பில் பங்கேற்ற பேராசிரியர்கள் உட்பட 10க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

இதையடுத்து, 94 பக்க குற்றப்பத்திரிகையை, வினாத்தாள் கசிவுகள் மற்றும் பொது தேர்வுகளில் நடக்கும் முறைகேடுகள் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு விரைவு நீதிமன்றத்தில், இந்த வழக்குக்கான குற்றப்பத்திரிகை சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

அதில், கூறப்பட்டு உள்ளதாவது: நீட் வினாத்தாள் தயாரிப்பில் இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் பாடங்களுக்கு தனித்தனியாக நிபுணர்களை கொண்டு வினாத்தாள் தொகுப்பு தயாரிக்கப்பட்டது. டில்லியின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள ஓக்லா என்ற இடத்தில், என்.டி.ஏ., அலுவலகத்தின் ரகசிய பிரிவில், கடந்த ஏப்ரலில் இந்த வினாத்தாள் தயாரிக்கும் பணி நடந்தது.

ஆங்கிலத்தில் தயாரிக்கப்பட்ட வினாத்தாள், பிராந்திய மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டன. அவ்வாறு மொழிபெயர்ப்பில் ஈடுபடும் நிபுணர்களுக்கு குறிப்பெடுப்பதற்காக வெற்று காகிதங்கள் வழங்கப்பட்டன.

வேதியியல் பாடத்துக்கான மொழிபெயர்ப்பில் ஈடுபட்ட பேராசிரியர் பி.வி.குல்கர்னி, வினாத்தாள் தொகுப்பில் இருந்த 135 வினாக்களையும், அதற்கான விடைகளையும், தனக்கு வழங்கப்பட்ட காகிதங்களில் எழுதி, யாருக்கும் தெரியாமல் எடுத்து சென்றுள்ளார்.

தாவரவியல் மற்றும் விலங்கியல் பாடத்துக்கான கேள்விகளை ஆங்கிலத்திலிருந்து மராத்தியில் மொழிபெயர்த்த பேராசிரியை மனிஷா மந்தாரே, அன்றாட பணி முடிந்து அறைக்கு திரும்பியதும், என்.சி.இ.ஆர்.டி., எனப்படும் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலின் பாடப் புத்தகங்களில், கேள்விகள் தொடர்பான பாடங்களை குறித்துக் கொண்டுள்ளார்.

கேமரா இல்லை



இயற்பியல் பாடத்துக்கான மொழிபெயர்ப்பு ஒப்படைக்கப்பட்ட பேராசிரியை மனிஷா சஞ்சய் ஹவல்தார், தனக்கு வழங்கப்பட்ட காகிதத்தில் கேள்வி குறிப்புகளை குறித்து வைத்து, தங்குமிடம் திரும்பிய பின் அவற்றை தனியாக குறித்து கொண்டுள்ளார்.

ரகசிய பிரிவு செயல்பட்ட அலுவலகத்தில் நிபுணர்களின் பணியை கண்காணிக்க, 24 மணி நேர கண்காணிப்பு கேமரா இல்லாததால், வினாத்தாள் தொடர்பான குறிப்புகளை அவர்கள் எளிதில் வெளியே எடுத்து செல்ல முடிந்தது.


அதேபோல், ரகசிய பிரிவில் நுழையும்போதோ, வெளியேறும்போதோ, அவர்கள் யாரும் சோதனைக்கு உட்படுத்தப்படவில்லை. இதுவும், வினாத்தாள் கசிவுக்கு மிக முக்கிய காரணம். வினாத்தாள் தயாரிப்பில் அனைத்துப் பிரிவுகளிலும் ஒரே நபர் ஈடுபடுத்தப்பட்டதும், வினாத்தாள் கசிவுக்கு காரணமாக அமைந்துள்ளது.

இடைத்தரகர்கள்



இடைத்தரகர்களான தேஜஸ் ஹர்ஷத்குமார் ஷா, டாக்டர் மனோஜ்பகவான் ராவ் ஷிருரே, ஷிவ்ராஜ் மோட்டேகான்கர், தனஞ்சய் நிவ்ருத்தி லோகண்டே ஆகியோருக்கு கேள்விகள் அனுப்பப்பட்டு, நீட் தேர்வு பயிற்சி மையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

ராஜஸ்தானைச் சேர்ந்த சுபம் மதுகர் கைர்னார், மங்கிலால் பிவால், தினேஷ் பிவால், விகாஸ் பிவால் மற்றும் ஹரியானாவைச் சேர்ந்த யாஷ் யாதவ் ஆகியோர், தேர்வுக்கு தயாரான மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோரை தொடர்பு கொண்டு, வினாத்தாளை கசியவிட்டுள்ளனர். இதற்காக, அதிகபட்சமாக 12 லட்சம் ரூபாய் வரை கைமாறியுள்ளது.

கைதான பேராசிரியர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட வினாத்தாள் குறிப்புகள், அவர்களின் மொபைல் போன் ஆகியவை, மத்திய தடயவியல் அறிவியல் ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இவற்றில், அவர்கள் முறைகேட்டில் ஈடுபட்டது உறுதியானது.


இந்த வழக்கில் கைதானவர்கள் மஹாராஷ்டிரா, ராஜஸ்தான், ஹரியானா, பீஹார் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். இவர்கள் அனைவரும் சேர்ந்து கூட்டுச்சதி செய்ததை அடுத்து, நீட் தேர்வுக்கான வினாத்தாள், தேர்வர்கள் மத்தியில் கசிந்தது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement