உயரதிகாரிகள் மீது லஞ்ச புகார் வந்தாலும் உடனே நடவடிக்கை எடுக்க அரசு உத்தரவு

12

சென்னை: 'ஒவ்வொரு துறையிலும், அதிகாரிகள், உயரதிகாரிகள் மீது, லஞ்ச புகார்கள் வந்தால், அதை மறைக்காமல், சம்பந்தப்பட்ட விஜிலென்ஸ் அதிகாரிகளுக்கு அனுப்பி விசாரணைக்கு உத்தரவிட்டு, நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, துறைகளின் தலைவர்களுக்கு, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அரசு உயரதிகாரி ஒருவர் கூறியதாவது: அரசின் பல துறைகளின் பிரிவு அலுவலகங்கள், கோட்ட, மாவட்ட, மண்டல, தலைமை அலுவலகங்களுக்கு, பல்வேறு சேவைகளை பெறுவதற்காக மக்களும், ஒப்பந்த பணிகளுக்காக ஒப்பந்ததாரர்களும் வருகின்றனர். அவர்களிடம், பலர் லஞ்சம் பெறுகின்றனர். பல அலுவலகங்களில், ஆரம்ப நிலையில் உள்ள பணியாளர்கள் முதல், அந்த அலுவலகத்தை நிர்வகிக்கும் அதிகாரிகள் வரை, லஞ்ச புகார் வந்தால், நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

சிபாரிசு



அவர்களுக்கு மேல், மாவட்ட, மண்டல, தலைமை அலுவலக அளவில் அதிகாரிகளாக இருப்போர் மீது, பெரும்பாலும் நடவடிக்கை எடுப்பதில்லை.

இதற்கு அவர்கள், மாவட்ட அமைச்சர்கள், துறை அமைச்சர்களுக்கு நெருக்கமாக இருப்பதுடன், அவர்களின் சிபாரிசால் பதவிகளில் இருப்பதுமே, முக்கிய காரணம். அவர்கள் மீது லஞ்ச புகார்கள் வந்தாலும், சம்பந்தப்பட்ட துறைகளை, நிர்வாகம் செய்யும் உயரதிகாரிகள், நடவடிக்கை எடுப்பதில்லை.

லஞ்ச ஒழிப்பு துறையினரும் நடவடிக்கை எடுப்பதில்லை. தற்போது, துறையின் அனைத்து மட்டங்களிலும் லஞ்சத்தை ஒழிக்க, அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

புகார் கடிதம்



எனவே, ஒரு துறையில் கடைநிலை பணியாளர்கள் முதல், அந்த துறையை வழிநடத்தும் உயரதிகாரிகள் வரை, யார் லஞ்சம் வாங்கினாலும், நடவடிக்கை எடுக்க அரசு உத்தரவிட்டுள்ளது.

அதிகாரிகள், உயரதிகாரிகளாக இருப்போர் மீது, லஞ்ச புகார்கள் வந்தால், அந்த புகார் கடிதங்களை மறைத்து விடாமல், சம்பந்தப்பட்ட விஜிலென்ஸ் அதிகாரிகளுக்கு அனுப்பி, விசாரணைக்கு உத்தரவிட்டு, உண்மை இருந்தால், கடும் நடவடிக்கை எடுக்குமாறு தெரிவிக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement