நியாயமான நிதி பகிர்வு கோரும் அரசு தீர்மானம் நிறைவேற்றம்: திமுக, அதிமுக ஆதரவு

17

நமது நிருபர்



மாநிலங்களுக்கு நியாயமான நிதிப் பகிர்வு கோரி தமிழக சட்டசபையில் தவெக அரசு கொண்டு வந்த தனித் தீர்மானத்திற்கு திமுக, அதிமுக ஆதரவு தெரிவித்தன. பிறகு இந்த தீர்மானம் சட்டசபையில் ஒருமனதாக நிறைவேறியது.

மாநிலங்களுக்கு நியாயமான நிதிப் பகிர்வை மத்திய அரசு உறுதி செய்ய கோரி, சட்டசபையில் நிதியமைச்சர் மரிய வில்சன் தனித் தீர்மானத்தை கொண்டு வந்தார். அப்போது நிதியமைச்சர் மரிய வில்சன் பேசியதாவது: இந்திய அரசியலமைப்பின் நிதிசார் கூட்டாட்சி கொள்கைகள், சமத்துவம் மற்றும் நியாயம் ஆகியவற்றிக்கு இணங்க மத்திய அரசுக்கு செலுத்தப்படும் வரிகளில் இருந்து தமிழகம் மாநிலத்திற்கு உரிய நிதி பகிர்வினை உறுதி செய்ய வேண்டும்.

மாநிலங்களின் பொருளாதாரப் பங்களிப்பு, நிதி முயற்சி, நல்லாட்சித் திறன் மற்றும் வளர்ச்சித் தேவைகளை உரிய முறையில் அங்கீகரிக்கும் வகையில் மத்திய வரிகளின் பகிர்விற்கான வெளிப்படையான மற்றும் சமமான நடைமுறையை பின்பற்ற வேண்டும். எதிர்காலத்தில் மத்திய வரிகளின் பகிர்வு தொர்பான ஏற்பாடுகளை மேற்கொள்ளும் போது தமிழகம் மாநிலத்தின் நியாயமான நிதி நலன்கள் பாதுகாக்கப்படுவதற்கான உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

திமுக, அதிமுக ஆதரவு

இந்த தனித்தீர்மானத்துக்கு அதிமுக ஆதரவு தெரிவித்தது. சட்டசபையில் அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் கூறுகையில், ''தமிழக அரசின் தனி தீர்மானத்திற்கு அதிமுக ஆதரவு அளிக்கிறது. நிதி பகிர்வை அதிகரிக்க அதிமுக வலியுறுத்தியது. நிதி பகிர்வில் தமிழகம் பாதிக்க கூடாது", என்றார்.

தீர்மானத்தில் திருத்தம் கோரி திமுக எம்எல்ஏக்கள் கோரிக்கை விடுத்தனர். திமுக எம்எல்ஏ தங்கம் தென்னரசு பேசுகையில், ''மாநிலங்களுக்கு 50% நிதிப் பகிர்வை உறுதி செய்ய தீர்மானத்தில் திருத்தம் செய்ய வேண்டும். மத்திய அரசின் நிதிப் பங்களிப்பு குறைவதால், தமிழ்நாடு அரசின் நிதிச்சுமை அதிகரிக்கிறது”, என்றார்.


நிறைவேற்றம்




பிறகு மத்திய அரசிடம் இருந்து தமிழக அரசுக்கு நியாயமான வரிப்பகிர்வு குறித்த அரசின் தனித்தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது.

Advertisement