நிதி நெருக்கடியில் இருந்து காப்பாற்றிய டாடா, ஸோஹோ; எம்.ஆர்.ஐ., ஸ்கேன் இயந்திரத்தை உருவாக்கிய பொறியாளர் நெகிழ்ச்சி

47



நமது நிருபர்




நாட்டின் முதலாவது எம்ஆர்ஐ ஸ்கேன் இயந்திரத்தை உருவாக்கிய பொறியாளர் அர்ஜூன் அருணாச்சலம், தனக்கு ஏற்பட்ட நிதி நெருக்கடியில் இருந்து டாடா மற்றும் ஸோஹோ நிறுவனங்கள் காப்பாற்றியதாக, நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

மனிதர்களுக்கு உண்டாகும் உடல் பாதிப்புகளை தெள்ளத்தெளிவாக கண்டறிய உதவும் சாதனங்களில் அதிக விலை மதிப்பு கொண்டது எம்.ஆர்.ஐ., ஸ்கேன் இயந்திரம். இந்த இயந்திரத்தை, முன்னேறிய நாடுகளை சேர்ந்த பன்னாட்டு நிறுவனங்களே தயாரிக்கின்றன. இயந்திரத்தின் விலை, குறைந்தபட்சம் 8 கோடி ரூபாய் முதல் அதிகபட்சம் 15 கோடி ரூபாய் வரை உள்ளது.

நாட்டில் தற்போது, 5 ஆயிரத்துக்கும் குறைவான எம்.ஆர்.ஐ., ஸ்கேன் இயந்திரங்களே பயன்பாட்டில் உள்ளன. அதுவும், பெரிய அளவிலான மருத்துவமனைகள் மட்டுமே இந்த இயந்திரத்தை வைத்திருக்கின்றன. சிறிய, நடுத்தர மருத்துவமனைகளுக்கு இத்தனை விலை கொடுத்து இந்த இயந்திரத்தை வாங்குவது சாத்தியமில்லை.

இதற்கு தீர்வு காணும் வகையில், இந்தியாவை சேர்ந்த பொறியாளர் அர்ஜூன் அருணாச்சலம், புதிய எம்.ஆர்.ஐ., ஸ்கேன் இயந்திரத்தை தன் வோக்சல்கிரிட்ஸ் ஸ்டார்ட்அப் நிறுவனத்தில் உருவாக்கினார். மேற்கத்திய எம்.ஆர்.ஐ., சாதனங்களை போல் அல்லாமல், இந்த இயந்திரத்தை குறைந்த செலவில் உருவாக்க முடியும். அதன் மூலம் எம்.ஆர்.ஐ., ஸ்கேன் கட்டணமும் குறையும்.

இது பற்றிய தகவல்கள் பரவியதும், பன்னாட்டு நிறுவனம் ஒன்று, அர்ஜூன் அருணாச்சலத்தின் நிறுவனத்துடன் கூட்டு சேரவும், முதலீடு செய்யவும் முன் வந்தது. கடுமையான நிதி நெருக்கடியில் இருந்த நிலையிலும், பன்னாட்டு நிறுவனத்தின் முயற்சிக்கு அர்ஜூன் அருணாச்சலம் உடன்படவில்லை.

இதையடுத்து அவருக்கு முதலில் ரத்தன் டாடாவின் டாடா டிரஸ்ட் அமைப்பும், பின்னர் ஸ்ரீதர் வேம்புவின் ஸோஹோ நிறுவனமும் நிதியுதவி வழங்கின. இதன் காரணமாகவே, தன் நிறுவனம், பன்னாட்டு நிறுவனத்தின் பிடியில் சிக்குவதில் இருந்து தப்பியது என்று வோக்சல்கிரிட்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியான அர்ஜுன் அருணாச்சலம் தெரிவித்தார்.

தற்போது 47 வயதான மின்னணுப் பொறியாளர் ​​அர்ஜுன் அருணாச்சலம் கூறுகையில், ''நாங்கள் உருவாக்கியுள்ள கருவி, எம்.ஆர்.ஐ ஸ்கேன் செலவை 70 சதவீதம் குறைக்கும். நாட்டின் ஒவ்வொரு மூலைக்கும் மேம்பட்ட நோயறிதல் சேவைகளைக் கிடைக்கச் செய்யும்.

எம்.ஆர்.ஐ., கருவிகள், இதுவரை உருவாக்கப்பட்ட மருத்துவ சாதனங்களிலேயே மிகவும் விலை உயர்ந்த மற்றும் தொழில்நுட்ப ரீதியாக அதிகத் தேவை கொண்ட சாதனங்களில் ஒன்றாகும். எம்.ஆர்.ஐ ஸ்கேனரை உருவாக்குவது என்பது பெரும்பாலும் ஒரு ஜெட் இன்ஜின் அல்லது ராக்கெட்டை உருவாக்குவதோடு ஒப்பிடப்படுகிறது '' என்றார்.


ஹீலியம் தேவையில்லை




வழக்கமான வெளிநாட்டு எம்.ஆர்.ஐ., ஸ்கேன் இயந்திரங்களில் காந்தங்களை குளிர்விக்க திரவ ஹீலியம் பயன்படுத்தப்படுகிறது. அது விலை உயர்வானது; பற்றாக்குறையானது; வெளிநாடுகளில் இருந்து மட்டுமே இறக்குமதி செய்யப்பட வேண்டியது; எம்.ஆர்.ஐ., ஸ்கேன் கட்டண உயர்வுக்கு இது ஒரு முக்கிய காரணம். ஆனால் அர்ஜூன் அருணாச்சலம் உருவாக்கியுள்ள எம்.ஆர்.ஐ., இயந்திரத்தில் திரவ ஹீலியம் பயன்பாடு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், வெளிநாட்டு எம்.ஆர்.ஐ., இயந்திரங்களுக்கான உதிரி பாகங்கள் கிடைப்பதில்லை; பழுதானால் நீக்குவதற்கு பொறியாளர்கள் கிடைப்பதில்லை என்ற பிரச்னைகளும் இருக்கின்றன. இதற்கு தீர்வு காணும் வகையில், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டுள்ள எம்.ஆர்.ஐ., ஸ்கேன் இயந்திரம் அமையும் என்று மருத்துவர்கள் கருதுகின்றனர்.

Advertisement