விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றார் முதல்வர் விஜய் மனைவி சங்கீதா : வழக்கு முடித்து வைப்பு

51

செங்கல்பட்டு: முதல்வர் விஜயிடமிருந்து விவாகரத்து வழங்கக் கோரி, செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கை, அவரது மனைவி சங்கீதா, நேற்று திரும்பப் பெற்றுள்ளார்.


தமிழக முதல்வராக உள்ள விஜய், கடந்த 1999ம் ஆண்டு, தன் ரசிகையான சங்கீதாவை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஜேசன் சஞ்சய் என்ற மகனும், திவ்யாசாஷா என்ற மகளும் உள்ளனர். விஜய், சங்கீதா தம்பதி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.


அதைத் தொடர்ந்து, செங்கல்பட்டு மாவட்ட குடும்ப நல நீதிமன்றத்தில், விவாகரத்து மற்றும் குடியிருப்பு உரிமை கோரி, சங்கீதா மனு தாக்கல் செய்தார். வழக்கு, கடந்த ஜூன் மாதம் 15ல் விசாரணைக்கு வந்தபோது, இருவரும் பிரபலங்கள் என்பதாலும், பாதுகாப்பு காரணங்களாலும், நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக ஆஜராக, நீதிமன்றம் அனுமதி வழங்கியது.


இன்று( ஆக.,07) மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தது. இதில், சட்டசபை கூட்டத்தொடர் நடப்பதால், வழக்கை வேறு தேதிக்கு தள்ளி வைக்கும்படி, விஜய் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.


ஆனால், சங்கீதா தரப்பில் இன்றே விசாரணை நடத்த வேண்டும் என கோரப்பட்டதால், வழக்கு பிற்பகலுக்கு தள்ளி வைக்கப்பட்டது.


இதைத் தொடர்ந்து, பிற்பகலில் நடந்த விசாரணையின்போது, நீதிபதி சுஜாதா முன், சங்கீதா, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக ஆஜராகி, 15 நிமிடங்களுக்கும் மேலாக விளக்கம் அளித்ததாக தெரிகிறது.


இதன் முடிவில், கணவர் விஜய் மீது தொடர்ந்த விவாகரத்து வழக்கை, வாபஸ் பெற்றுக் கொள்வதாக சங்கீதா தெரிவித்தார். அதைத் தொடர்ந்து, வழக்கை முடித்து வைப்பதாக, குடும்ப நல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


அதேநேரம், எதிர்காலத்தில் தேவைப்பட்டால், புதிதாக விவகாரத்து வழக்கு தாக்கல் செய்ய, சங்கீதாவுக்கு, நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

Advertisement