13 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை வருமா; தனி நபர் மசோதாவுக்கு எம்.பி.,க்கள் ஆதரவு

6

புதுடில்லி: 13 வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுமியர், சமூக ஊடகங்கள், கேமிங் தளங்களில் கணக்கு தொடங்குவதற்குத் தடை விதிக்கும் மசோதா, பார்லிமென்டில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

சமூக ஊடகங்களால் சிறுவர், சிறுமியருக்கு மனதளவில் பாதிப்பு ஏற்படுகிறது; அதற்கு கட்டுப்பாடு விதிக்க வேண்டும் என்ற கருத்து உலகம் முழுவதும் பரவி வருகிறது. எனவே, சமூக ஊடகங்களை இளம் வயதினர் பயன்படுத்துவதை தடுக்கும் வகையில், சில நாடுகளில் சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.
அந்த வகையில், இந்தியாவிலும், சில மாதங்களாக இது பற்றி விவாதிக்கப்பட்டு வந்தது.

இது தொடர்பாக சட்டம் இயற்றும் வகையில் பார்லிமென்ட் மழைக்கால கூட்டத்தொடரில் தனி நபர் மசோதா அறிமுகம் செய்யப்பட உள்ளது.
பாஜ எம்.பி. பைஜயந்த் பாண்டாவால் முன்மொழியப்பட்ட இந்த மசோதா, நேற்று பார்லிமென்டில் அறிமுகப்படுத்தப்படவிருந்த இரண்டு தனிநபர் மசோதாக்களில் ஒன்றாகும். அவை ஒத்திவைக்கப்பட்டதால் இந்த மசோதா விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை.

மசோதாவின்படி, 13 வயதுக்குட்பட்ட குழந்தைகள் பெற்றோரின் அனுமதியின்றி சமூக ஊடகங்கள், கேமிங் ஆப்களில் கணக்குகளை உருவாக்குவதற்குத் தடை விதிக்கப்படும். தனிநபர் மசோதாக்கள் அரிதாகவே சட்டமாகின்றன; இதுவரை 12 தனி நபர் மசோதாக்கள் மட்டுமே பார்லிமென்டில் நிறைவேற்றப்பட்டுள்ளன.
எனினும், இந்த மசோதாவுக்கு, கட்சி வித்தியாசம் இன்றி, பல்வேறு தரப்பு எம்.பி.,க்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இந்த மசோதா நிறைவேற்றப்பட்டு சட்டமானால் மீறும் சமூக வலை தளங்களுக்கு ரூ.10 கோடி வரை அபராதம் விதிக்கப்படலாம். மீண்டும், மீண்டும் அல்லது வேண்டுமென்றே மீறினால், தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் பிரிவு 69Aன் கீழ் சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்படலாம் அல்லது முடக்கப்படலாம்.
ஏற்கனவே ஆஸ்திரேலியா, கனடா, பிரேசில், பிரிட்டன் மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகள் சமூக வலைதளங்களை பயன்படுத்த வயது அடிப்படையிலான கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்தியுள்ளன. பிரான்ஸ், ஸ்பெயின், டென்மார்க், தாய்லாந்து மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகள் இதேபோன்ற நடவடிக்கைகளைப் பரிசீலித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement