பொய்யர், முதலைக் கண்ணீர் வடிப்பவர்; ராகுல் மீது பாஜ எம்பி தர்மேந்திர பிரதான் குற்றச்சாட்டு

10


புதுடில்லி: பொய்களை பரப்பவும், முதலைக் கண்ணீர் வடிக்கவும் மட்டுமே பார்லிமெண்ட்டுக்கு ராகுலும், காங்கிரஸ் எம்பிக்களும் வருகின்றனர் என்று பாஜ முன்னாள் மத்திய அமைச்சரும், எம்பியுமான தர்மேந்திர பிரதான் குற்றம்சாட்டி உள்ளார்.

போட்டித் தேர்வு முறைகேடுகள், வினாத்தாள் கசிவு ஆகியவற்றைக் கண்டித்து ஜார்க்கண்டில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந் நிலையில் முன்னாள் மத்திய கல்வி அமைச்சரும், பாஜ எம்பியுமான தர்மேந்திர பிரதான், ராகுலையும், காங்கிரஸ் எம்பிக்களையும் கடுமையாக விமர்சித்து உள்ளார்.

பார்லிமெண்டில் அவர்கள் நடந்துகொள்ளும் விதம், செயல்பாடுகளை விமர்சித்துள்ள அவர், அரசியல் ஆதாயங்களுக்காக இந்த போராட்டத்தை எதிர்க்கட்சிகள் பயன்படுத்திக் கொள்கின்றன என்றார். அவர் மேலும் தமது எக்ஸ் வலைதள பதிவில் குறிப்பிட்டு உள்ளதாவது;

மாணவர்களின் நலன்களில் குறித்து ராகுல் தொடர்ந்து பொய்களை பரப்பி வருகிறார். உண்மைகளே இல்லாமல் வழக்கமாக பொய் சொல்லும் எதிர்க்கட்சித் தலைவர், பார்லிமெண்டுக்கு வரவும் விரும்பவில்லை, பதில்களையும் கேட்கவும் விரும்பவில்லை. உள்துறை அமைச்சர் அமித்ஷா மீது ஆதாரமற்ற, உண்மைக்கு மாறான பொய்யான குற்றச்சாட்டுகளை முன் வைப்பது ராகுல் மற்றும் காங்கிரசின் அரசியல் விரக்தியை காட்டுகிறது.

எந்த பிரச்னை என்றாலும் அதை பார்லி.யில் விவாதிக்க இந்த அரசு தயாராகவே இருக்கிறது. ஆனால் ஜனநாயகத்தை முடக்கும் காங்கிரஸ், இளைஞர்களின் நலன்களை சிதைக்கிறது. நாட்டின் நலன்களை விட சொந்த நலன்களுக்கே முன்னுரிமை அளிக்கின்றனர். இங்கு விவாதம் நடக்கும் போதெல்லாம் பார்லி.க்கு வெளியே கூச்சல், குழப்பத்தை ஏற்படுத்துகின்றனர். இந்த அவையில் தெரிவிக்கப்படும் பதில்களை அவர்கள் கேட்க தயாராக இல்லை.

அரசியல் ரீதியாக தங்களை முன்னிலைப்படுத்திக் கொள்ள பொய்களையும், அமளியையும் உருவாக்குகின்றனர். ஜார்க்கண்டில் போராடும் மாணவர்களின் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட கொடூரத்தை நாடே கண்டது.

இங்கு கேள்வி என்னவென்றால் ஒவ்வொரு பிரச்னைக்கும் நிருபர்களை சந்திக்கும் ராகுல், இப்போது ஏன் மவுனம் காக்கிறார் என்பதே. காங்.சின் இரட்டை வேடத்தை இளைஞர்கள் முழுதாய் புரிந்து கொண்டு இருக்கின்றனர். ஜனநாயகத்தில் சர்வாதிகாரத்திற்கு இடமில்லை என்பதை அவசரப்படும் ராகுலும், காங்கிரசும் புரிந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு தர்மேந்திர பிரதான் கூறி உள்ளார்.

Advertisement