தலைமைச் செயலகம் அருகே இடைத்தரகர்கள் தொல்லை

5

சென்னை: சென்னை தலைமைச் செயலகம் அருகே, மனு எழுதுபவர்கள் போல் நடித்து, முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடம் சிலர் பணம் பறித்து வருகின்றனர்.

தலைமைச் செயலகத்தில், முதல்வரின் தனிப்பிரிவு உள்ளது. இங்கு மனு அளித்தால் தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையில், தினமும் நுாற்றுக்கணக்கானோர் வருகின்றனர்.

அதிலும், விஜய் முதல்வரான பின், கடந்த மூன்று மாதங்களாக, அந்த எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சராசரியாக ஒரு நாளுக்கு, 500க்கும் மேற்பட்ட மனுக்கள் வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவர்களுக்கு உதவும் வகையில், மனு எழுதி கொடுப்போரும் அதிகரித்துள்ளனர். தலைமைச் செயலகம் எதிரே உள்ள பூங்காவில் அமர்ந்து, மனு எழுதி கொடுத்து வந்தனர்.

இதை பயன்படுத்தி, இடைத்தரகர்கள் நடமாட்டமும் தொடங்கியுள்ளது.

முதியோர், மாற்றுத்திறனாளிகளை குறிவைத்து ஏமாற்றுகின்றனர். அதிகாரிகளை தெரியும் என்றும், அவர்களிடம் மனுவை நேரடியாக தந்து விடுவதாகவும், பிரச்னையை தீர்த்து வைப்பதாகவும் கூறுகின்றனர்.

அதற்கு 1,000 ரூபாய் முதல் 1,500 ரூபாய் வரை பணம் வசூல் செய்து வருகின்றனர். இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது.

Advertisement