பேச்சு, பேட்டி, அறிக்கை

1

தி.மு.க., செய்தி தொடர்புக்குழு துணைத் தலைவர் மருது அழகுராஜ் அறிக்கை:

துண்டு விழும் பட்ஜெட்டுகளை பார்த்திருக்கிறோம். ஆனால், தமிழே துண்டு துண்டாக விழுந்த பட்ஜெட்டை இப்ப தான் பார்த்தோம். முதலில், இந்த நிதி அமைச்சருக்கு தமிழ் சொல்லிக் கொடுக்க, பட்ஜெட்டில் பணம் ஒதுக்குங்க. கடந்த ஆண்டு கடைசியில் கட்டிய மின் கட்டணம், 78 ரூபாய். கடந்த முறை கட்டிய மின் கட்டணம், 219 ரூபாய். இந்த மாதம் வந்துள்ள மின் கட்டணம், 2,410 ரூபாய். இது, 'கரன்ட் பில்லா' அல்லது கந்து வட்டியா?

மழைக்காலத்திலும், குளிர்காலத்திலும் கட்டிய மின் கட்டணமே, வெயில் சுட்டெரிக்கும் காலத்திலும் வரணும்னு எதிர்பார்ப்பது பேராசை அல்லவா?


மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல் எம்.பி., அறிக்கை:

'நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்; மத்திய அரசு கொண்டு வந்துள்ள வெளிநாட்டு நிதி பங்களிப்பு ஒழுங்குமுறை சட்ட மசோதாவை திரும்பப் பெற வேண்டும்' என்ற இரண்டு தீர்மானங்கள், தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்டுள்ளன. பா.ஜ., தவிர மற்ற அனைத்துக் கட்சிகளின் ஒருமித்த ஆதரவோடு, இந்த தீர்மானங்களை நிறைவேற்றியதை வரவேற்கிறேன். தமிழகத்தின் நலனுக்கான இந்த ஒற்றுமை தொடர வேண்டும்.

இந்த ஒற்றுமையில், உங்க கட்சிக்கு எந்த பங்களிப்பும் இல்லையே... சட்டசபை தேர்தல்ல, 'சீட்' ஒதுக்காம, 'அல்வா' தந்த தி.மு.க., மீது உங்களுக்கு கோபமே வரலையா?


தி.மு.க., வர்த்தகர் அணி மாநில செயலரும், கவிஞருமான காசிமுத்து மாணிக்கம் பேச்சு: பார்லிமென்டில் எம்.பி.,யே இல்லாத த.வெ.க., தலைமையில் நடந்த கூட்டத்தில், தமிழக எம்.பி.,க்களின் ஹீரோவாக, 22 பேருடன் இருக்கும் தி.மு.க., கலந்து கொள்ளுமா? 'கூழுக்கு உப்பு கேட்டால், பாலுக்கு சர்க்கரை வேண்டும்' என்பது போல், உயிர் பிரச்னையான காவிரிக்கு அனைத்துக் கட்சி கூட்டத்தை, த.வெ.க., அரசு கூட்டவில்லை.

உங்க கட்சி ஆட்சியில் இருந்தப்ப, எத்தனையோ முறை அனைத்துக் கட்சி கூட்டங்களை நடத்தினீங்களே... அதனால், காவிரி பிரச்னைக்கு ஏதாவது தீர்வு கிடைச்சுதா? அனைத்து மக்கள் அரசியல் கட்சித் தலைவர் ராஜேஸ்வரி பிரியா அறிக்கை: தமிழக நிதி அமைச்சர் மரிய வில்சன், மதம் குறித்து பேச அவசியமில்லாத இடத்தில் மதம் குறித்து பேசியது, ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. 'தமிழ் படித்தால் கூட கற்றுக்கொள்ள முடியாது' என அவர் பேசியிருப்பது, இன்னும் மோசமானது. எல்லா மதங்களும், அன்பையும், இரக்கத்தையும் கற்றுக் கொடுக்கின்றன என்பதில் மாற்றமில்லை. ஆனால், தமிழ் உயிர் போன்றது; தாய்க்கு நிகரானது. தமிழோடு எதையும் ஒப்பிட முடியாது.

வாஸ்தவம் தான்... 'மற்ற மதங்கள் எல்லாம் அன்பு, இரக்கத்தை கற்றுக் கொடுப்பதில்லை' என்பது போல அமைச்சர் பேசியது ஏற்புடையதல்ல.

Advertisement