கிராம சபை கூட்டங்களுக்கு ஆர்வம் காட்டும் இளைஞர்கள்

கடலாடி: சுதந்திர தின விழாவையொட்டி கிராமசபை கூட்டங்களில் பங்கேற்க இளைஞர்களிடம் அதிக ஆர்வம் காணப்படுகிறது.

தமிழக சட்டசபை தேர்தலில் புதியதாக த.வெ.க., ஆட்சி அமைந்த பிறகு என்னென்ன நலத்திட்டங்கள் அவற்றை முறையாக அதிகாரிகள் செயல்படுத்துகின்றனரா என்பதை கண்காணிப்பதில் தற்போது இளைஞர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். திருப்புல்லாணி, மண்டபம், கடலாடி, கமுதி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு ஊராட்சிகளில் நடக்கும் கிராமசபை கூட்டங்களில் அரசின் புதிய திட்டங்கள் என்னென்ன என்பதை தெரிந்து கொள்வதில் ஆர்வம் காட்டுகின்றனர்.

இளைஞர்கள் கூறியதாவது:

கடந்த ஆட்சியில் கிராம சபை கூட்டங்களில் பங்கேற்பதில் விருப்பம் இருக்காது. பெயரளவிற்கும், சம்பிரதாயத்திற்கும் 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் மற்றும் வேண்டப்பட்டவர்களை வைத்துக் கொண்டு கிராம சபை கூட்டங்களை நடத்தி தீர்மானங்களில் கையெழுத்து பெறுவார்கள். இதனால் பல ஊராட்சிகளில் கிராம சபை கூட்டங்களில் பொதுமக்களுக்கும் ஊராட்சி நிர்வாகத்திற்கும் அதிருப்தி நிலவும்.

தற்போது த.வெ.க., ஆட்சியில் சுதந்திர தின விழாவிற்கு பிறகு நடக்கக்கூடிய கிராமசபை கூட்டத்தில் உள்ளூர் பிரச்னைகளையும் ஏற்கனவே தீர்வாகாத பல்வேறு பிரச்னைகளின் பட்டியல்களையும் கையில் வைத்துக் கொண்டு ஆர்வமுடன் ஆண்களும், பெண்களும் உள்ளனர். தீர்க்கப்படாத பிரச்னைக்கு கிராமசபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி அவை மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு நிறைவேற்ற வேண்டும் என்பதில் ஆர்வமுடன் இளைஞர்கள் உள்ளனர் என்றனர்.

––

Advertisement