வீடு கட்டுவதற்கு நஞ்சை நிலத்தை வாங்குவது நல்லதல்ல!

எதிர்காலத்தில் வீடு கட்டி குடியேறலாம் என்ற எண்ணத்தில் நீங்கள் நிலம் வாங்குவதாக இருந்தால் குறிப்பிட்ட சில அடிப்படை விஷயங்களில் கவனமாக இருக்கணும். தமிழகத்தில் ஒரு நிலம் வாங்குவதானால், அதன் பத்திரத்தில் வில்லங்கம் இருக்கிறதா, பட்டா இருக்கிறதா என்று பார்த்தால் போதும் என்று மக்கள் நினைக்கின்றனர்.

ஆனால், வீடு கட்டும் நோக்கத்தில் ஒரு நிலத்தை வாங்குவதாக இருந்தால், அதன் தற்போதைய வகைபாடு என்ன என்று பாருங்கள். நகர், ஊரமைப்பு சட்டப்படி ஒவ்வொரு நகரத்துக்கும் நில வகைபாடு என்ன என்பது வரையறுக்கப்பட்டு உள்ளது.

இதில் ஆதார குடியிருப்பு பகுதி என்று வகைபடுத்தப்பட்ட நிலத்தை வாங்கினால் மட்டுமே அதில் நீங்கள் வீடு கட்ட முடியும். சில இடங்களில், நஞ்சை, புஞ்சை வகைபாட்டில் உள்ள நிலங்கள் சிறு பாகங்களாக பிரித்து விற்பனை செய்யப்படுகிறது.

இத்தகைய நிலங்களை வாங்கினால், அதை தோட்டம் வைப்பது போன்ற நோக்கங்களுக்கு மட்டுமே பயன்படுத்த முடியும். இதில், வீடு கட்ட வேண்டும் என்று நீங்கள் திட்டமிட்டால், நில வகைபாடு மாற்ற வேண்டும் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.

பொதுவாக, ஆதார குடியிருப்பு வகைபாட்டில் உள்ள நிலத்தில் மட்டுமே வீடு கட்டுவதற்கு சம்பந்தப்பட்ட அரசு துறைகள் ஒப்புதல் அளிக்கும். நஞ்சை, புஞ்சை வகைபாட்டில் இருந்தால், அது விவசாய நிலமாக வகைபடுத்தப்பட்டுள்ளது என்பதால் அங்கு வீடு கட்ட முடியாது.

இது போன்ற நிலத்தை வாங்கியவர்கள் அதில் வீடு கட்ட வேண்டும் என்றால், விவசாய நிலத்தை வேறு பயன்பாட்டுக்கு மாற்ற சம்பந்தப்பட்ட துறைகளின் ஒப்புதல் பெற வேண்டும். குறிப்பாக, நிலம் அமைந்துள்ள பகுதியின் உள்ளாட்சி அமைப்பு, வேளாண் துறை உதவி இயக்குநர் ஆகியோரின் சான்றிதழ்கள் பெற வேண்டும்.

ஏக்கர் கணக்கில் விவசாய நிலத்தை வாங்கி வைத்து இருந்தால், இது போன்ற சான்றிதழ்கள் பெற செலவு செய்யலாம். ஓரிரு சென்ட் அளவுக்கு விவசாய நிலம் வாங்கியவர்கள் இந்த சான்றுகள் பெற லட்சக்கணக்கில் பணம் செலவு செய்வது நடைமுறையில் சாத்தியமில்லை.

எனவே, விவசாய வகைபாட்டில் உள்ள நிலங்களை சிறு பாகங்களாக கொடுக்கின்றனர் என்று ஆசைப்பட்டு வாங்குவது பல்வேறு பிரச்னைகளில் நீங்களே சிக்கிக்கொள்வதாக அமையும். வீடு கட்டுவதற்கான நிலம் வாங்கும் போது வகைபாடு விஷயத்தில் கவனமாக இருக்கனும் என்கின்றனர் நகரமைப்பு வல்லுநர்கள்.

Advertisement