நான் ஒரு 'அறிவுசார் நக்சலைட்': காங்., 'மாஜி' சிதம்பரம் பெருமிதம்

11

- நமது நிருபர் -

'நான் ஒரு அறிவுசார் நக்சலைட் என்பதில் பெருமிதம் கொள்கிறேன்' என, காங்கிரசைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

டில்லி செங்கோட்டையில் நேற்று முன்தினம் நடந்த சுதந்திர தின விழாவில், தேசியக்கொடியை ஏற்றி வைத்த பின், நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றினார்.

அப்போது அவர், 'அதிகார மையங்களில் நக்சல் சிந்தனை கொண்ட பலர், பல ஆண்டுகளாக உள்ளனர். முன்னர், அரசின் முக்கிய குழுக்களில் ஆலோசகர்களாக இருந்த அவர்களின் நக்சல் சிந்தனை, அப்போதைய அரசுகளின் கொள்கைகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

'வனப்பகுதிகளில் இருந்த ஆயுதமேந்திய நக்சல்களை ஒழித்து விட்டோம். ஆனால், நக்சல் மூளையுடன், நாட்டில் வன்முறை மற்றும் அமைதியின்மையை உருவாக்கும் வாய்ப்புகளை தேடுபவர்கள் இன்னும் உள்ளனர்.

'நக்சல் சிந்தனை கொண்ட அவர்களை அடையாளம் கண்டு தனிமைப்படுத்த வேண்டும்' என பேசினார்.

இந்நிலையில், பிரதமர் மோடிக்கு பதிலளிக்கும் விதமாக, காங்கிரசைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம், தன் சமூக வலைதள 'எக்ஸ்' பக்கத்தில், 'நான், சிந்தனை ரீதியான அறிவுசார் நக்சல் என்பதில் பெருமை கொள்கிறேன்' என குறிப்பிட்டு உள்ளார்.

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான காங்., கூட்டணி அரசில், மத்திய உள்துறை அமைச்சராக சிதம்பரம் இருந்தார்.

உள்துறை என்பது, நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் நக்சலைட்டுகளை ஒழிக்கும் பொறுப்பை கொண்ட இலாகா.

அதன் அமைச்சராக கடந்த 2008 - 2012 வரை இருந்த சிதம்பரம், தன்னை 'அறிவுசார் நக்சலைட்' என கூறியது, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement