1,500 டன் நெல் மூட்டைகள் மாயமானதால் இருவர் சஸ்பெண்ட்; ரூ.3.75 கோடி இழப்பீடு ஏற்பட்டதால் நடவடிக்கை

16


காஞ்சிபுரம்: அரவைக்கு அனுப்பிய 1,500 டன் நெல் மூட்டைகள் நான்கு ஆலைகளில் இருந்து மாயமாகி இருப்பதால், கண்காணிக்க தவறிய நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் அருள்வனிதா மற்றும் தரக் கட்டுப்பாடு உதவி மேலாளர் ஜெயவேல் ஆகிய இருவரையும், நுகர்பொருள் வாணிப கழக மேலாண் இயக்குனர் ஷில்பா பிரபாகர் சதீஷ், 'சஸ்பெண்ட்' செய்து உத்தரவிட்டுள்ளார். 3.75 கோடி ரூபாய் அரசிற்கு இழப்பீடு ஏற்பட்டுள்ளதாக, துறை சார்ந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில், காஞ்சிபுரம், வாலாஜாபாத், குன்றத்துார், ஸ்ரீபெரும்புதுார், உத்திரமேரூர் ஆகிய ஐந்து தாலுகாக்களில், 1.20 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளன. இதில், சம்பா, நவரை, சொர்ணவாரி ஆகிய மூன்று பருவங்களிலும், ஒரு லட்சம் ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது.

சம்பா பருவத்தில் சாகுபடி செய்யும் நெல், மார்ச், ஏப்ரல் ஆகிய மாதங்களில் நெல் அறுவடைக்கு வரும். நவரை பருவத்தில் சாகுபடி செய்யும் நெல், மே, ஜூன் ஆகிய மாதங்களில் அறுவடைக்கு வரும். சொர்ணவாரி பருவத்தில் சாகுபடி செய்யப்படும் நெல், செப்டம்பர் மாதம் அறுவடைக்கு வரும்.


சாதனை




சம்பா மற்றும் நவரை ஆகிய இரு பருவங்களில், 35,000 டன் நெல் மூட்டைகள். சொர்ணவாரி பருவத்திற்கு, 1 லட்சம் டன் நெல் மூட்டைகள் என மொத்தம், ஒராண்டிற்கு 1.35 லட்சம் டன் நெல் மூட்டைகளை, நுகர்பொருள் வாணிப கழகத்தினர் கொள்முதல் செய்கின்றனர்.

ஓராண்டு முழுதும் கொள்முதல் செய்யும் 1.35 லட்சம் டன் நெல் மூட்டைகளை கடந்த நவரை பருவத்தில் கொள்முதல் செய்து, நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகள் சாதனை படைத்துள்ளனர். இந்த நெல் மூட்டைகளை, 12 அரவை நிலையங்களுக்கு அனுப்பி, அரிசியாக மாற்றி ரேஷன் கடைகளுக்கு சப்ளை செய்ய வேண்டும். ஒவ்வொரு அரிசி ஆலை உரிமையாளர்களும், தங்களின் நிர்வாக திறனுக்கு ஏற்ப, வங்கி முன் வைப்புத்தொகை செலுத்திவிட்டு நெல் அரவையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதற்கேற்ப, நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகள் கொள்முதல் செய்யும் நெல் மூட்டைகளை அனுப்ப வேண்டும். நுாறு சதவீதம் நெல் மூட்டைகளில் இருந்து, 68 சதவீதம் அரிசியாக மாற்றி அதன் உரிமையாளர்கள் நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகளிடம் ஒப்படைக்க வேண்டும் என, வழி காட்டியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூன் மாதம் நுகர்பொருள் வாணிப கழகத்தில் ஊழல் தடுப்பு பிரிவினர் காஞ்சிபுரம் மாவட்டத்தில் இயங்கும் அரிசி ஆலைகளை ஆய்வு செய்தனர். இதில், 1,500 டன் நெல் மூட்டைகள் மாயமாகி இருப்பது தெரிய வந்தது.

இதில், வெள்ளைகேட் பகுதியில் இயங்கும் ஒரு அரிசி ஆலை நிர்வாகம் மட்டும், 1,250 டன் நெல்லை அரிசியாகவும் மாற்றவில்லை. மேலும், ஒரு ஆலையில், 100 டன் மற்றும் இரண்டு ஆலைகளில் 150 டன், என, 1,500 டன் நெல் மூட்டைகளை அரிசியாகவும் மாற்றவில்லை என்பது விசாரணையில் தெரிய வந்தது. நெல்லாகவும் அரிசியாகவும் ஆலையில் இருப்பு இல்லை என, கண்டுபிடித்தனர். இந்த நெல்லின் மதிப்பு, 3.75 கோடி ரூபாய் என, துறை சார்ந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.


கலக்கம்




இதை கண்காணிக்க தவறிய, காஞ்சிபுரம் மண்டல மேலாளர் அருள் வனிதா, 48, மற்றும் தரக்கட்டுப்பாடு உதவி மேலாளர் ஜெயவேல், 52, ஆகிய இருவர் மீது ஏன் நடவடிக்கை எடுக்கgfகூடாது என, விளக்கம் கேட்டுள்ளனர்.

இரு தரப்பினர் இடையே, எவ்வித பதிலும் இல்லாததால், முறைகேடுகளை கண்காணிக்க தவறிய இருவரையும், நுகர்பொருள் வாணிப கழக மேலாண் இயக்குனர் ஷில்பா பிரபாகர் சதீஷ் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார். மாவட்ட அளவில் இரு அலுவலர்கள் சஸ்பெண்ட் செய்திருப்பது, நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகள் இடையே, கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து, நுகர்பொருள் வாணிப கழக அதிகாரி ஒருவர் கூறியதாவது: அரவைக்கு அனுப்பிய நெல், அரிசியாகவும் இல்லை., நெல்லாகவும் இல்லை என, ஊழல் தடுப்பு பிரிவு அலுவலர்கள் ஆய்வு செய்து, கண்காணிக்க தவறிய மண்டல மேலாளர், தரக்கட்டுப்பாடு உதவி மேலாளர் ஆகிய இருவர் சஸ்பெண்ட் செய்துள்ளனர்.

தவறு நடத்த அரிசி ஆலை உரிமையாளர் நான்கு பேர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. புதியவர்களை நியமிக்கும் வரையில், செங்கல்பட்டு நுகர்பொருள் வாணிப கழக அதிகாரி கூடுதல் பொறுப்பு வகிப்பார்கள் என, கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement