'பி.எம். கேர்ஸ்' நிதியின் இருப்பு ரூ.8,452 கோடியாக அதிகரிப்பு

4

புதுடில்லி: 'பி.எம். கேர்ஸ்' எனப்படும், பிரதமரின் குடிமக்கள் உதவி மற்றும் அவசரகால நிவாரண நிதியின் இருப்பு, 2024 - 25 நிதியாண்டில், மொத்தம் 8,452.95 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதற்கு முந்தைய ஆண்டில், 7,173 கோடி ரூபாய் இருப்பு இருந்தது.


கொரோனா போன்ற பேரிடர் காலங்களில் மக்களுக்கு உதவும் வகையில், கடந்த 2020ம் ஆண்டு மார்சில் 'பி.எம்.கேர்ஸ்' என்ற நிதியம் உருவாக்கப்பட்டது. மத்திய அரசால் நிர்வகிக்கப்படும் இந்த நிதியத்தின் மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனே நிவாரணம் வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.


இந்த நிதியத்திற்கு, பொது மக்களிடம் மட்டுமின்றி அரசு, தனியார் நிறுவனங்கள் மற்றும் பெரு நிறுவனங்கள் நன்கொடைகள் அளித்து வருகின்றன. இந்த நிதியத்தின், தணிக்கை அறிக்கை சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது.


அதன் விபரம்:

பி.எம். கேர்ஸ் நிதியின் கீழ் கடந்த 2023 - 24ல் மொத்த இருப்பு, 7,173 கோடி ரூபாய் இருந்தது. இது, 2024 - 25 நிதியாண்டில் சாதனை அளவாக 8,452 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதில், 6,641 கோடி ரூபாய் வைப்புத்தொகையாக வைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் 475 கோடி ரூபாய் வட்டி வருவாயாக கிடைத்துள்ளது. இதன் மூலம், ஏற்கனவே உள்ள நிதியில் இருந்து கூடுதல் வருமானம் ஈட்டப்பட்டுள்ளது.


எனினும், உள்நாட்டு நன்கொடைகள், 2023 - 24 நிதியாண்டில், 681.81 கோடி ரூபாய் இருந்த நிலையில், 2024 - 25 நிதியாண்டில் 479.05 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. இதேபோல் வெளிநாட்டு நன்கொடையும் 11.35 லட்சம் ரூபாயில் இருந்து, 9.28 லட்சம் ரூபாயாக குறைந்துள்ளது. இதுதவிர, கொரோனா காலத்தில் பெற்றோரை இழந்து தவிக்கும் குழந்தைகளின் கல்வி, மருத்துவ காப்பீடு போன்றவற்றிற்காக பி.எம். கேர்ஸ் நிதியில் இருந்து, 87.85 லட்சம் ரூபாய் மட்டுமே செலவிடப்பட்டுள்ளது.


நன்கொடைகள் குறைந்தாலும், ஏற்கனவே வைப்புத்தொகையில் இருப்பு வைக்கப்பட்ட தொகைக்கு கிடைத்த வட்டி வருவாய் மூலம் 2024 - 25 நிதியாண்டின் பி.எம்.கேர்ஸ் நிதியத்தின் மொத்த இருப்புத்தொகை அதிகரித்துள்ளது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement