திருத்தப்பட்ட மேகதாது அணை திட்ட அறிக்கை; மத்திய நீர் ஆணையத்திடம் கர்நாடகா அரசு சமர்ப்பிப்பு

6


பெங்களூரு: திருத்தப்பட்ட மேகதாது அணை திட்ட அறிக்கையை மத்திய நீர் ஆணையத்திடம் கர்நாடகா அரசு சமர்ப்பித்துள்ளது.

காவிரியின் குறுக்கே மேகதாது அணை அமைக்கும் வேலைகளை கர்நாடக அரசு தொடர்ச்சியாக மேற்கொண்டு வரும் நிலையில், தமிழக அரசு அவ்வப்போது உச்ச நீதிமன்றத்தை நாடி அந்த முயற்சிகளை தடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக மேகதாது அணை தொடர்பாக திட்ட அறிக்கையை தயாரிக்க கர்நாடகா அரசுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துவிட்டது.

இதன் பிறகு, மேகதாது அணை திட்ட அறிக்கையை மத்திய நீர் ஆணையத்திற்கு கர்நாடகா அரசு அனுப்பியது. பிறகு திருத்தம் செய்ய கோரி திட்ட அறிக்கையை மத்திய நீர் ஆணையம் திருப்பி அனுப்பிவிட்டது. இதன் பிறகு திட்ட அறிக்கையில் கர்நாடகா அரசு திருத்த நடவடிக்கையை மேற்கொண்டது.

தற்போது திருத்தப்பட்ட மேகதாது அணை திட்ட அறிக்கையை மத்திய நீர் ஆணையத்திடம் கர்நாடகா அரசு சமர்ப்பித்துள்ளது. இதன் வாயிலாக மாநில அரசு மேகதாது குடிநீர் மற்றும் மின்சாரத் திட்டத்தை மிக விரைவாகச் செயல்படுத்த மாநில அரசு உறுதியான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இதற்கிடையே நேற்று (ஆகஸ்ட் 18) மாலை முதல்வர் சிவக்குமார் தலைமையில் நடந்த உயர்மட்ட ஆலோசனை கூட்டத்தில் நீர்வளத்துறை அமைச்சர் என். செல்லுவராயசாமி மற்றும் உயர் அதிகாரிகள், வனத்துறை செயலாளர் மற்றும் நீர்வளத்துறை செயலாளர் உள்ளிட்ட பல உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில் மேகதாது அணை திட்டத்தின் தற்போதைய நிலை மற்றும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து விரிவாக விவாதித்தனர். இத்திட்டத்திற்குத் தேவையான வனத்துறையின் அனுமதி பெறும் நடைமுறைகளைத் தாமதமின்றி நிறைவு செய்ய இக்கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. அணை கட்டும் பகுதியில் அகற்றப்பட வேண்டிய மரங்கள் தொடர்பாக விதிகளைப் பின்பற்றி மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், மாற்று நிலம் ஒதுக்கீடு மற்றும் விதிமுறைகளின்படி புதிய மரக்கன்றுகளை நட்டு வளர்ப்பதற்கான திட்டங்கள் ஆகியவை குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.
இந்த சூழலில் தான் விரிவான திட்ட அறிக்கை திருத்தப்பட்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மீண்டும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது; நீர்வளத்துறை அமைச்சர் செல்லுவராயசாமி மற்றும் மாநில அரசு இத்திட்டத்தை விரைவில் செயல்படுத்த தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். வனத்துறை அனுமதியைப் பெறுவதற்கான அடுத்தகட்ட நடைமுறைகளை உடனடியாகத் தொடங்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக நீர்வளத்துறை அமைச்சர் தெரிவித்தார். இதற்கிடையே தமிழக அரசு எத்தகைய முடிவு எடுக்கும் என்று காவிரி கரையோர மக்கள், விவசாயிகள் ஏக்கத்துடன் காத்திருக்கின்றனர்.



@block_G@

அறிக்கையில் உள்ள முக்கிய தகவல்கள்!

* மேகதாது அணை திட்டத்திற்கு 12,500 ஏக்கர் வனப்பகுதி பயன்படுத்தப்படும். இதற்கு பதிலாக தட்சிண கன்னடா, ஷிவமோகாவில் வனப்பகுதியில் மரங்கள் நடப்பட்டு மேம்படுத்தப்படும்.

* மேகதாது அணைகட்டும் பகுதியில் உள்ள 8.90 லட்சம் மரங்கள் வெட்டப்படும். இதில், 7 லட்சம் மரங்கள் சிறியவை; 1 லட்சம் மரங்கள் மிகப் பெரியவை (50 முதல் 90 ஆயிரம் வரையிலான பழமையான மரங்கள்).

* மேகதாது அணையில் 64 டிஎம்சி வரை தண்ணீரை சேமிக்க முடியும். இதில் பெங்களுரூக்கு 5.4 டிஎம்சி தண்ணீர் குடிநீருக்கு பயன்படுத்தப்படும் என கர்நாடகா நீர்வளத்துறை அமைச்சர் செல்லுவராயசாமி தெரிவித்தார்.block_G

Advertisement