என் ஆட்கள் 3,000 பேர் இன்னும் வெளியில் உள்ளனர்: பாக்., பயங்கரவாதி ஷசாத் வீடியோ வெளியீடு

புதுடில்லி: 'இந்தியாவில் என் குழுவைச் சேர்ந்தவர்கள் என கூறி கைது செய்யப்பட்டவர்கள் கரப்பான்பூச்சி கட்சியினர். என் அமைப்பை சேர்ந்த 3,000 பேர் இன்னும் சுதந்திரமாக வெளியே உள்ளனர்' என, பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாதி ஷசாத் பாட்டி வீடியோ வெளியிட்டுள்ளார்.

பாகிஸ்தானில் ரவுடியாக இருந்து பயங்கரவாதியாக மாறியவர் ஷசாத் பாட்டி. இவரை ஏற்கனவே இந்தியா தேடி வருகிறது. மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்ஸில் பதுங்கியிருந்து இவர் தன் அமைப்பை இந்தியாவில் செயல்பட வைக்க முயற்சித்து வருகிறார்.

இவருக்கு பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.,யின் ஆதரவு இருப்பதாகவும் தகவல் வெளியானது. அவரது கும்பலைச் சேர்ந்தவர்கள் சுதந்திர தினத்தன்று தாக்குதல் நடத்த திட்டமிடுவதாக உளவுத்தகவல் கிடைத்தது.

இதையடுத்து 14 மாநிலங்களில் ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் மேற்கொண்டு, ஷசாத் பாட்டியின் நாசவேலையை நம் பாதுகாப்பு படையினர் மற்றும் போலீசார் முறியடித்தனர்.

அவருடன் தொடர்பில் இருந்த 200க்கும் மேற்பட்ட இளைஞர்கள் உத்தர பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட பகுதிகளில் கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடம் இருந்து ஆயுதங்கள், வெடிபொருட்கள் மற்றும் கண்காணிப்பு சாதனங்கள் கைப்பற்றப்பட்டன. இந்நிலையில், சமூக வலைதளங்களில் இயங்கி வரும் ஷசாத் பாட்டி வெளியிட்டுள்ள புதிய வீடியோவில் கூறியுள்ளதாவது:

சமீபத்தில் இந்தியாவில் கைது செய்யப்பட்டவர்கள் என் கூட்டாளிகள் இல்லை. அவர்கள் சி.ஜே.பி., எனப்படும் கரப்பான்பூச்சி கட்சியை சேர்ந்தவர்கள். டில்லி ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டங்களுடன் தொடர்புடையவர்களும் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களின் முகங்களையும், அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படும் ஆயுதங்களையும் அரசு பகிரங்கமாக வெளியிட வேண்டும். அந்த ஆயுதங்கள் எங்கு தயாரிக்கப்பட்டவை என தெரிவிக்க வேண்டும்.

என்னுடைய ஆட்கள் 3,000 பேர் இன்னமும் சுதந்திரமாக வெளியில் உள்ளனர். கைது செய்யப்பட்ட கரப்பான்பூச்சி கட்சியினர் என்னை தொடர்புகொண்டால் சட்ட மற்றும் நிதியுதவி வழங்க தயார். இவ்வாறு வீடியோவில் கூறப்பட்டுள்ளது.

@block_B@ உ.பி.,யில் 52 பேர் கைது!

பாகிஸ்தான் பயங்கரவாதி ஷசாத் பாட்டியுடன் தொடர்பில் உள்ளதாக சந்தேகிக்கப்பட்ட உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த 175 பேரை போலீசார் விசாரித்து வந்தனர். அதில் 52 பேருக்கு தொடர்பு இருப்பது தெரிந்தது. அவர்கள் 12 வழக்குகளின் கீழ் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.block_B

Advertisement