கூடுதல் பணிச் சுமையால் போலீசார் திணறல்: தாலுகா காவல் நிலையம் அமைக்கப்படுமா?
கள்ளக்குறிச்சி: மாவட்ட தலைமையிடத்தில் உள்ள கள்ளக்குறிச்சி காவல் நிலையத்தை இரண்டாக பிரித்து தாலுகா காவல் நிலையம் அமைப்பதற்கு காவல் துறை உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். கள்ளக்குறிச்சி மாவட்டம் துவங்கி, 6 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. கலெக்டர் அலுவலகம், எஸ்.பி., அலுவலகம் போன்ற பல்வேறு அலுவலகங்கள் படிப்படியாக அமைக்கப்பட்டு, செயல்பட்டு வருகிறது. அதேபோல், கூடுதலாக புதிதாக கோர்ட்டுகளும் துவங்கி செயல்பட்டு வருகிறது.
மாவட்ட தலைமையிடமாக கள்ளக்குறிச்சி இருப்பதால் கள்ளக்குறிச்சி காவல் நிலையத்தில் பணிபுரியும் போலீசாருக்கு தற்போது கூடுதல் பணிச்சுமை ஏற்பட்டுள்ளது.
காவல் நிலையத்தில் ஒரு இன்ஸ்பெக்டர், 5 சப் இன்ஸ்பெக்டர்கள் 73 போலீசார் என, மொத்தம் 79 பேர் பணிபுரியும் வகையில் நியமனம் செய்யப்பட்டனர். ஆனால், தற்போது குறைந்த எண்ணிக்கையிலான போலீசார் மட்டுமே பணிபுரிகின்றனர்.
அதிலும் சிலர் எஸ்.பி., அலுவலகம், டி.எஸ்.பி., அலுவலகம் போன்ற மாவட்ட காவல் துறை உயர் அலுவலகங்களில் அயல் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் கோர்ட் பணிகள், சம்மன் கொடுக்கும் பணி, அரசு மருத்துவமனை பாதுகாப்பு, விபத்து சான்று பெறும் பணி என ஒரு சிலர் சென்று விடுகின்றனர். ஒரு சிலர் விடுமுறையில் செல்கின்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உதயமான பின் ஆர்ப்பாட்டம், முற்றுகைப் போராட்டம், மறியல் போராட்டம், விழிப்புணர்வு ஊர்வலம், பொதுக்கூட்டம் போன்ற நிகழ்வுகள் மாவட்ட தலைநகரான கள்ளக்குறிச்சியில் அதிகரித்துள்ளது.
மேலும் மாவட்ட அரசு உயர் அதிகாரிகள் பலர் அவ்வப்போது வந்து செல்கின்றனர். கள்ளக்குறிச்சி காவல் நிலைய போலீசார் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுகின்றனர். மேலும் அரசியல் கட்சிகளின் மாநாடு, முதல்வர் பங்கேற்பு விழா, பிரசித்தி பெற்ற கோவில்களின் திருவிழா, முக்கிய தலைவர்களின் ஜெயந்தி விழா போன்றவற்றிற்கான பாதுகாப்பு பணிகளுக்கும் அவ்வப்போது போலீசார் அனுப்பி வைக்கப்படுகின்றனர்.
கள்ளக்குறிச்சி காவல் நிலையத்திற்குட்பட்டு கள்ளக்குறிச்சி நகரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த 29 கிராமங்களை உள்ளடக்கியுள்ளது. நகரம் மற்றும் கிராமப் புறங்களில் பல்வேறு திருட்டு மற்றும் அவ்வப்போது கொலை, கொள்ளை, விபத்துகள், திருட்டு போன்ற சம்பவங்கள் அடிக்கடி நிகழ்கிறது.
போலீஸ் பற்றாக்குறையால் வழக்குகளை விரைந்து விசாரிக்கவும், குற்றவாளிகளை உடனடியாக பிடிக்க முடியாமலும் திணறி வருகின்றனர்.
எனவே, தற்போது உள்ள கள்ளக்குறிச்சி காவல் நிலையத்தை, டவுன் காவல் நிலையமாக மாற்றி, கிராமப் பகுதிகளை உள்ளடக்கி தாலுகா காவல் நிலையம் அமைப்பதற்கு காவல் துறை உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.