நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் மறைமுக வசூலை தடுக்க கோரிக்கை 

சேத்தியாத்தோப்பு, ஆக.22–அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் மூட்டைக்கு ரூ.55 முதல் 60 ரூபாய் வரை விவசாயிகளிடம் வசூலிப்பதை மாவட்ட நிர்வாகம் தடுத்து நிறுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

விவசாய சங்க தலைவர் சிட்டிபாபு விடுத்துள்ள அறிக்கை:

மாவட்டத்தில், புவனகிரி வட்டாரத்தில் குறுவை நெல் அறுவடை பணி கடந்த ஒரு வாரமாக தீவிரா நடைபெற்று வருகிறது. அறுவடை செய்யப்படும் நெல்லை, நேரடி கொள்முதல் நிலையங்களில் கொட்டி வைத்து சீனியாரிட்டி அடிப்படையில் பட்டியல் எழுத்தரிடம் டோக்கன் பெற்று காத்திருந்து விவசாயிகள் விற்று வருகின்றனர்.

நெல்லை அரசு கொள்முதல் செய்வதற்கு கொள்முதல் நிலையங்களில் மூட்டைக்கு ரூ.55 முதல் 60 வரை மறைமுகமாக வசூலிக்கப்படுகிறது. இந்த கட்டாய வசூலால் விவசாயிகள் பலரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

மறைமுக வசூல் குறித்து எம்.எல்.ஏ.,க்கள், விவசாய சங்கங்கள் குரல் கொடுத்தும் அரசு தடுத்து நிறுத்தவில்லை. நுகர் பொருள் வாணிப கழக அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தும் தடுக்க முன்வரவில்லை.

எனவே மாவட்ட நிர்வாகம் விவசாயிகளின் நலன் கருதி கொள்முதல் நிலையங்களில் நடைபெற்று வரும் வசூல் வேட்டையை ரகசிய ஆய்வு நடத்தி அதற்கு முற்றுபுள்ளி வைக்க வேண்டும்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement