கிரைம் கார்னர்;கோவை

ரூ.1.98 லட்சம் அபேஸ்

கோவை: சுண்டக்காமுத்துார் விபின், 32 என்பவரிடம், தனியார் வங்கி அதிகாரி போன்று தொடர்பு கொண்ட நபர் கிரெடிட் கார்டு அப்டேட் செய்யவேண்டும் எனக்கூறி, லிங்க் ஒன்றை அவரது எண்ணுக்கு அனுப்பியுள்ளார். லிங்க் ஓப்பன் செய்த அவர் ஓ.டி.பி., எண்ணை பகிர்ந்ததால் அவரது கிரெடிட் கார்டில் இருந்து 1. 98 லட்சம் ரூபாய் எடுக்கப்பட்டது. அவரது புகாரின்படி மாவட்ட சைபர் கிரைம் போலீசார் விசாரிக்கின்றனர்.

வங்கிக்கணக்கில் பணம் சுருட்டல்

கோவை: பொள்ளாச்சி மகாலிங்கபுரத்தை சேர்ந்த ஸ்ரீனிவாசன், 64 . தனது போனில் பதிவிறக்கம் செய்து வைத்திருந்த செயலியில் வந்த குறுஞ்செய்தியை திறந்தபோது, போன் கட்டுப்பாட்டை இழந்தது. பின்னர் அச்செயலியை நீக்கினார். சிறிது நேரத்தில் தனது வங்கிக்கணக்கில் இருந்து, 1.76 லட்சம் ரூபாயை எடுக்கப்பட்டதாக மெசேஜ் வந்தது. இதுகுறித்து, வங்கியில் விசாரித்து பின்னர் மாவட்ட சைபர் கிரைம் பிரிவில் புகார் அளித்துள்ளார். போலீசார் விசாரிக்கின்றனர்.

மொபைல் போன் திருட்டு

உக்கடம்: உக்கடம் பஸ் ஸ்டாண்டில், இறங்கி மதுக்கரைக்கு செல்ல வேறு பஸ் ஏற சென்ற, பீளமேடு ராஜ்குமார், 53 என்பவரின் சட்டை பையில் இருந்த போனை ஒருவர் பறித்துக்கொண்டு ஓடினார். இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில், சி.சி.டி.வி., பதிவுகளை ஆராய்ந்து குனியமுத்துார் நடராஜ், 39 என்பவரை உக்கடம் போலீசார் கைது செய்தனர்.

கோர்ட் உத்தரவை மீறியவர் மீது வழக்கு

ரேஸ்கோர்ஸ்: காலிமனையிடம் தொடர்பாக, நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள சூழலில், கோவிந்தன் என்பவர் நீதிமன்ற உத்தரவை மீறி காலிமனையிடத்தில் குடோன் கட்டிக்கொள்ள மருதுபாலகிருஷ்ணன் என்பவருக்கு அனுமதி அளித்துள்ளார். அவ்விடத்தில் கட்டுமானப்பணி நடப்பதாக, திருச்சி சாலை வி.சி.கே. லே அவுட்டில் உள்ள வேதா சிங், 61 என்பவர் ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் அளித்தார். கட்டுமான பணிகள் நிறுத்தப்பட்டு, சாய்தா பேகம், மருது பாலகிருஷ்ணன் உள்ளிட்ட ஐந்து பேர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரிக்கின்றனர்.

சாலை விபத்து; ஒருவர் பலி

பீளமேடு: அவிநாசி சாலை, அரசு பாலிடெக்னிக் கல்லுாரி அருகே, தர்மபுரி சரவணன், 34 காரை ஓட்டி வந்துள்ளார். அதிவேகமாக ஓட்டியதால் முன்பக்கம் சென்று கொண்டு இருந்த இருசக்கர வாகனத்தில் மோதியதில் கன்னியாகுமரி ஜீஜோ, 30 என்பவர் நிலைத்தடுமாறி கீழே விழுந்து படுகாயமடைந்தார். தலையில் ஏற்பட்ட காயத்தால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரிக்கின்றனர்.

மனைவிக்கு கத்திக்குத்து

பெரியகடை வீதி: கெம்பட்டி காலனி, 2வது வீதியை சேர்ந்தவர் மகேந்திரபாபு. அடிக்கடி குடித்து விட்டு வீட்டில் தகராறு செய்தார். இதை மனைவி பிரியதர்ஷினி கண்டித்தும் கேட்காததால் தாய் வீட்டுக்கு சென்றார். அவரது துணிகளை எடுத்து செல்ல வீட்டுக்கு வந்த போது தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த மகேந்திரபாபு, மனைவியின் வயிற்றில் கத்தியால் குத்தி விட்டு தப்பினார். பிரியதர்ஷினிக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. பெரியகடை வீதி போலீசார், மகேந்திரபாபுவை தேடி வருகின்றனர்.

2 கிலோ கஞ்சா விற்றவர் கைது

சாய்பாபாகாலனி: வடகோவை, கூட்ஷெட் ரோட்டில் சாய்பாபாகாலனி போலீசார் ரோந்து சென்றனர். அங்கு நின்றிருந்த பீகாரை சேர்ந்த வினோத்ராமிடம் சோதனையிட்ட போது, 2 கிலோ கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்தார். வினோத்ராம், செல்வபுரத்தில் அறை எடுத்து தங்கி கஞ்சா விற்றது தெரிந்தது. அவர் சிறையிலடைக்கப்பட்டார்.

மனைவி திட்டியதால் கணவன் மாயம்


வி.எச்.ரோடு: தெலுங்கு வீதியை சேர்ந்தவர் அழகர்சாமி. அடிக்கடி குடித்து விட்டு வந்ததை மனைவி முத்துலட்சுமி கண்டித்தார். மது குடித்தால் இனி வீட்டுக்குள் விடமாட்டேன் என, மனைவி எச்சரித்தார். இதனால் கோபத்தில் வெளியே சென்ற அழகர்சாமி, வீடு திரும்பவில்லை. போலீசார் விசாரிக்கின்றனர்.

லாட்டரி விற்றவர் கைது

கரும்புக்கடை: கரும்புக்கடை, சவுக்கார் நகரில் போலீசார் ரோந்து சென்றனர். அப்பகுதியை சேர்ந்த சவுகத்அலி, கேரள மாநில லாட்டரி விற்றுக் கொண்டிருந்தார். அவரை கைது செய்த போலீசார், 36 லாட்டரி சீட்டுக்களை பறிமுதல் செய்து ஜாமீனில் விடுவித்தனர்.

விபத்தில் எலக்ட்ரீசியன் பலி

பீளமேடு: கன்னியாகுமரியை சேர்ந்தவர் ஜிஜோ. துடியலுாரில் உறவினர் வீட்டில் தங்கி, விமானநிலையத்தில் எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வந்தார். நேற்று காலை பணியை முடித்துவிட்டு, அவிநாசி- ரோட்டில் பைக்கில் வந்துகொண்டிருந்தார். பீளமேட்டில் காரை கடக்க முயன்ற போது, காரின் கண்ணாடி பைக்கில் உரசியது. நிலைதடுமாறி மேம்பால துாணில் மோதியதில் உயிரிழந்தார். கிழக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement