மழைக்கு தாங்காத கரூர் சாக்கடையை துார்வார எதிர்பார்ப்பு

கரூர்:கரூர் நகரில் மழையின் போது, சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால், பருவ மழை தீவிரம் காட்டும் முன், சாக்கடை கால் வாய்களை துார் வார வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
கரூர் நகரில் கடந்த மாதம், விட்டு விட்டு மழை பெய்தது. கடந்த, 19ல் கரூர் நகரம், பசுபதிபாளையம், வெங்கமேடு, திருமாநிலையூர், சுங்ககேட், காந்தி கிராமம், திருகாம்புலியூர், சுக்காலியூர் உள்ளிட்ட பகுதிகளில், 14 மி.மீ., மழை பெய்தது. அப்போது, கரூர் நகர பகுதிகளான கோவை சாலை, ஜவஹர் பஜார், தின்னப்பா கார்னர், திருச்சி சாலை, கலைஞர் நகர், கணபதி நகர் பகுதிகளில் தண்ணீர் சாலைகளில் பெருக்கெடு த்து ஓடியது. இதனால், பொதுமக்கள் கார், டூவீலர்களில் கூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. பசுபதிபாளையம் குகை வழிப்பாதை, பெரிய குளத்துப்பாளையம் குகை வழிப்பாதைகளில், சிறிதளவு தண்ணீர் தேங்கி நின்றது.
இதுகுறித்து, பொதுமக்கள் கூறியதாவது:
மாநகராட்சி பகுதியில் உள்ள, சாக்கடை கால்வாய்களை சுத்தம் செய்து, பல மாதங்களாகிறது. மண், பிளாஸ்டிக் பொருட்களால் அடைப்பு ஏற்பட்டுள்ளது. வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்ல வழியில்லை. இந்நிலையில், மழை பெய்யும் போது, அடைப்பு காரணமாக கால்வாயில் செல்லாமல், சாலைகளில் தண்ணீரில் ஓடியது. பருவ மழை தீவிரம் காட்டும் முன், மாநகராட்சி பகுதியில் உள்ள சாக்கடை கால்வாய்களை சுத்தம் செய்ய, நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.

Advertisement