திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி திருவாரூர் பெண்ணிடம் ரூ. 4.5 லட்சம் மோசடி புதுச்சேரி வாலிபருக்கு போலீஸ் வலை

அரியாங்குப்பம்: திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி, திருவாரூர் ஆடிட்டர் பெண்ணிடம் 4.5 லட்சம் ரூபாய் மோசடி செய்த வாலிபதர போலீசார் தேடி வருகின்றனர்.

திருவாரூர் அசேஷம், முருகப்பா நகரை சேர்ந்தவர் சஞ்சிதா, 24; மலோசியாவில் ஆடிட்டர் பணி செய்து வருகிறார். புதுச்சேரி, அரியாங்குப்பம், சண்முகா நகர் துரைசிங்கம் வீதியை சேர்ந்தவர் ராஜசேகர் மகன் சுந்தரமூர்த்தி, 23. இவர் இன்ஸ்டாகிராம் மூலம், கடந்த 3 ஆண்டுகளாக சஞ்சிதாவிடம் பழகி, இருவரும் திருமணம் செய்து கொள்வதாக முடிவு செய்திருந்தனர்.

இந்நிலையில், மலோசியாவில் இருந்து சொந்த ஊருக்கு வந்த சஞ்சிதா கடந்த மாதம் 21ம் தேதி அரியாங்குப்பத்தில் உள்ள சுந்தரமூர்த்தி வீட்டு வந்தார். அங்கு இருவரும் சில நாட்கள் ஒன்றாக தங்கியிருந்தனர். 

அப்போது, சுந்தரமூர்த்தி டிராவல்ஸ் தொழில் செய்ய சஞ்சிதாவிடம் பணம் கேட்டிருந்தார். சஞ்சிதா தான் அணிந்திருந்த தங்க நகைகளை 5 லட்சம் ரூபாய்க்கு விற்று பணமாக வைத்திருந்தார்.

அப்பெண் வைத்திருந்த பணத்தில் இருந்து, சுந்தரமூர்த்தி 4.5 லட்சம் ரூபாயை எடுத்து கொண்டு, அப்பெண்ணிடம் சொல்லாமல் தலைமறைவானார். 

இதனால் அதிர்ச்சியடைந்த அப்பெண் சுந்தரமூர்த்தி உறவினர்களின் வீடுகள் மற்றும் நண்பர்களிடம் விசாரித்தும் அவர் எங்கு சென்றார் என தெரியவில்லை. இதுகுறித்து, சஞ்சிதா கொடுத்த புகாரின் பேரில், அரியாங்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து, திருமணம் செய்து கொள்வதாக பெண்ணை ஏமாற்றி பணம் மோசடி செய்து தலைமறைவான சுந்தரமூர்த்தியை தேடி வருகின்றனர்.

Advertisement