தனியார் நிறுவனத்தில் அத்துமீறியதாக த.வெ.க., - எம்.எல்.ஏ., மீது வழக்கு

6


நமது நிருபர்




தனியார் நிறுவனத்தில் அத்துமீறி நுழைந்த த.வெ.க., - எம்.எல்.ஏ., மீது போலீசார் வழக்கு பதிந்த நிலையில், போட்டியாக, எம்.எல்.ஏ.,வும் போலீசில் புகார் அளித்துள்ளார்.

புதுச்சேரி, திருபுவனை தொழிற்பேட்டையில், 'ப்ரிஜ் ' உள்ளிட்ட எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் தயாரிக்கும் 'வெர்ல்பூல்' நிறுவனம் இயங்கி வருகிறது. அங்கு பணியாற்றும் ஊழியர்கள் புகாரில், திருபுவனை தொகுதி த.வெ.க., - எம்.எல்.ஏ., சாய் சரவணன் குமார், நேற்று முன்தினம் நிறுவனத்தில் ஆய்வுக்கு சென்றார்.

பணியில் இருந்த ஊழியர்கள், எம்.எல்.ஏ.,வை தடுத்ததாக கூறப்படுகிறது. அவர்களை மீறி, எம்.எல்.ஏ., தன் ஆதரவாளர்களுடன் அத்துமீறி நிறுவனத்திற்குள் சென்றுள்ளார். நிறுவன மேலாளர் சிவராமகிருஷ்ணன் புகாரில், எம்.எல்.ஏ., மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது அத்துமீறி நுழைதல், பாதுகாப்பு அதிகாரிகளை திட்டுதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதற்கிடையே, நிறுவனத்தை ஆய்வு செய்ய சென்றபோது, மேலாளர்கள் மற்றும் ஊழியர்கள் தகராறில் ஈடுபட்டதாக, சாய் சரவணன்குமார், பி.சி.ஆர். செல் எஸ்.பி.,யிடம் புகார் அளித்துள்ளார். அதில், 'வெர்ல்பூல் நிறுவனம், பொது இடங்களை ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக கூறப்பட்ட புகார் தொடர்பாக ஆய்வு செய்ய சென்றேன்.

அப்போது மேலாளர்கள், பாதுகாப்பு அதிகாரிகள், என்னை தடுத்தனர். நிறுவன நுழைவாயில் அறையில் அமரவைத்து, வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 'அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, தெரிவித்துள்ளார். நிறுவன மேலாளர்கள் இருவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Advertisement