பரந்துார் விமான நிலையம் ரத்து; காங்., வரவேற்பு

சென்னை: 'பரந்துார் விமான நிலையம் கைவிடப்பட்டதை வரவேற்கிறோம்' என, காங்கிரஸ் தமிழக தலைவர் மாணிக்கம் தாகூர் கூறியுள்ளார்.

அவரது அறிக்கை:

ஏழு ஆண்டுகளாக ஏகனாபுரம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள், தங்கள் நிலத்தையும், வாழ்வாதாரத்தையும் பாதுகாக்க போராடி வந்தனர். பரந்துார் விமான நிலைய திட்டம் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்திய விமான நிலைய ஆணையம் சமர்ப்பித்த சாத்தியக்கூறு அறிக்கையில், 'பரந்துார் நீர்நிலைகளால் சூழப்பட்ட பகுதி; தேர்வு செய்யப்பட்ட நிலப்பரப்பில் நான்கில் ஒரு பங்குக்கும் அதிகமான பகுதி, பாசன குளங்களை கொண்டது' என, குறிப்பிட்டுள்ளது.

தாழ்வான நிலப்பரப்பு மற்றும் நீர் தேங்கும் தன்மை ஆகியவை, மூன்று ஆண்டுகளுக்கு முன்பே அரசின் பதிவில் இருந்தன. நிலம் கையகப்படுத்த, சட்ட நடைமுறையிலும் தீவிரமான குறைபாடுகள் இருந்தன.

மாற்றுத் திட்டத்திற்கும் அரசு தெளிவான காலக்கெடுவை நிர்ணயிக்க வேண்டும். எதிர்காலத்தில் எந்த இடம் தேர்வு செய்யப்பட்டாலும், பாதிக்கப்படும் மக்களுடன், உண்மையான, வெளிப்படையான ஆலோசனை நடத்த வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement