அமைச்சர் செங்கோட்டையன் vs இபிஎஸ் காரசார வாதம்

1

சென்னை: சட்டசபையில் அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் இடையே காரசாரமான விவாதம் நடந்தது.

சட்டசபையில் அமைச்சர் செங்கோட்டையன், ''எடப்பாடி தொகுதியில் எங்கள் வேட்பாளர் அருண் வேட்புமனு வாபஸ் பெற்றது குதிரை பேரம் இல்லையா?'' என கேள்வி எழுப்பினார். இதனால் அவையில் சில நிமிடம் பரபரப்பான சூழல் காணப்பட்டது.

இதற்கு பதில் அளித்து அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் பேசியதாவது: யாரும் வாபஸ் வாங்கவில்லை. முறையாக வேட்புமனு தாக்கல் செய்யாததால் அவரது வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டது.

ஒரு கட்சியில் வெற்றி பெற்ற எம்எல்ஏ ராஜினாமா செய்துவிட்டு வேறு கட்சியில் சேருவதா? எங்களோடு இருந்தவர்கள் திடீரென எப்படி வேறு கட்சிக்கு செல்வார்கள்? ராஜினாமா செய்தவுடன் முதல் மாடிக்குச் சென்று எப்படி வேறு கட்சியில் சேர முடியும்? இவ்வாறு இபிஎஸ் பேசினார்.

உடனே குறுக்கிட்ட சபாநாயகர் ஜேசிடி பிரபாகர், ''அதிமுக 6 எம்எல்ஏக்கள் ராஜினாமா குறித்து நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதால், இது குறித்து சட்டசபையில் பேச அனுமதியில்லை; இபிஎஸ் உணர்ச்சி வசப்படாமல் பேசுங்கள், என்றார்.

இதற்கிடையே, ''இடைத்தேர்தல் விரைவாக நடத்தப்பட வேண்டும் என்பதுதான் எங்கள் விருப்பம்; இடைத்தேர்தலிலும் வெற்றி பெறுவோம்'' என அமைச்சர் செங்கோட்டைன் உறுதிப்பட தெரிவித்தார்.

Advertisement