காரியாபட்டியில் மகளிர் போலீஸ் ஸ்டேஷன் அமைக்க எதிர்பார்ப்பு

காரியாபட்டி, ஆக. 26 -

காரியாபட்டி பகுதிகளில் பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுத்து, விரைவான நடவடிக்கை எடுக்க புதிய மகளிர் போலீஸ் ஸ்டேஷன் அமைக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.

காரியாபட்டி தாலுகா பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் உள்ளன. அப்பகுதியில் ஏற்படும் குடும்பப் பிரச்சினைகள், பெண்களுக்கு எதிரான கொடுமைகள், வரதட்சணை புகார்கள், குழந்தைகள் தொடர்பான வழக்குகளுக்கு காரியாபட்டி போலீஸ் ஸ்டேஷனிலோ அல்லது பல கி.மீ., தொலைவில் உள்ள அருப்புக்கோட்டை மகளிர் போலீஸ் ஸ்டேஷனையோ நாட வேண்டிய நிலை உள்ளது. அருப்புக்கோட்டைக்கு சென்று புகார் அளிப்பதில் பெண்கள், முதியவர்களுக்கு.பல்வேறு நடைமுறைச் சிரமங்கள் ஏற்படுகின்றன. நீண்ட தூரம் செல்வதுடன், கால தாமதம் ஏற்படுவதால் கவலை தெரிவித்தனர்.

காரியாபட்டியில் பிரத்யேக மகளிர் போலீஸ் ஸ்டேஷன் அமையும் பட்சத்தில், பெண்களின் புகார்கள் மீது உடனுக்குடன் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க முடியும். தாலுகா மையத்திலே மகளிர் ஸ்டேஷன் செயல்படுவது பெண்களுக்கு கூடுதல் பாதுகாப்பு உணர்வையும், தயக்கமின்றி புகார் அளிக்கும் தைரியத்தையும் தரும். குடும்பப் பிரச்னைகளுக்கு உடனடியாக நேரில் சென்று கவுன்சிலிங் வழங்க வழிவகை ஏற்படும். காரியாபட்டி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான மகளிர் போலீஸ் ஸ்டேஷன் அமைக்க, போலீஸ் உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள், மக்கள் வலியுறுத்தினர்.

Advertisement