உரிமம் பெறாத உணவுக்கடை: அபராதம் அதிகரித்து உத்தரவு; போதை பொருள் விற்றால் 'சீல்'

5

கோவை: உரிமம் பெறாமல் இயங்குதல், சுகாதாரமற்ற முறையில்பராமரித்தல், உணவுக்கடைகளில் தடை செய்யப்பட்ட போதைப்பொருட்கள் விற்றல் ஆகியவற்றிற்கு, இதுவரைவிதிக்கப்பட்டு வந்த அபராதத்தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது.

போதையில்லா தமிழகம் என்பதை வலியுறுத்தி, மாநகராட்சி, மாவட்ட நிர்வாகம், போலீசாருடன், உணவு பாதுகாப்பு துறையையும் இணைத்து 391 குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. வாரத்தில் இரு நாட்கள், தடை செய்யப்பட்ட போதைப்பொருள் விற்கப்படுகிறதா என்பதை கண்காணிக்க உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இத்துடன், ஆய்வுப்பணிகளில் சில மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.

குறிப்பாக, உரிமம் பெறாத உணவுக்கடைகளுக்கு, எப்படி பதிவு சான்றிதழ் பெற விண்ணப்பிப்பது என்பதை முதலில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அதன்பிறகும் உரிமம் பெறாமல் இருந்தால், ரூ. 10 ஆயிரம் வரை அபராதம் விதிக்க வேண்டும். இதற்கு முன்பு, அபராதத்தொகைரூ.5 ஆயிரமாக இருந்தது.

இதேபோல, சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரித்தால் முன்பு ரூ.1,000 அபராதம் விதிக்கப்பட்ட நிலையில் தற்போது, 10 ஆயிரம் ரூபாய் வரை விதிப்பதோடு, இத்தொகையை மூன்று நாட்களுக்குள் கருவூலத்தில் செலுத்த வேண்டுமெனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

மாநில உணவு பாதுகாப்பு துறை ஆணையர் லால்வினா வெளியிட்டுள்ள இந்த உத்தரவில், மாதந்தோறும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் மேற்கொண்ட ஆய்வு குறித்த அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். போ தைப்பொருள் விற்கும் உணவுக்கடைகள், முதல் முறை ஆய்வில் சிக்கினால் ரூ.25 ஆயிரம், இரண்டாவது முறை சிக்கினால் ரூ.50 ஆயிரம், மூன்றாவது முறை பிடிபட்டால், ரூ. 1 லட்சம் அபராதம் விதிக்க வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது.

இத்துடன், 3 மாதம் வரை உணவுக்கடைக்கு சீல் வைக்க வேண்டும்.மூன்று முறைக்கு மேல் போதைப்பொருள் விற்றால் நிரந்தரமாக உரிமம் ரத்து செய்ய, புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக, உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் தெரி வித்தனர்.

Advertisement