இந்தியா - ஜி.சி.சி., நாடுகள் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்த பேச்சு தீவிரம்

புதுடில்லி: இந்தியா மற்றும் ஜி.சி.சி., கூட்டமைப்பு எனும் வளைகுடா நாடுகளின் ஒத்துழைப்பு கவுன்சில் இடையிலான தடையற்ற ஒப்பந்த பேச்சுவார்த்தையை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லும் வகையில் இரு தரப்பிலும் முக்கிய பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

ஜி.சி.சி., கவுன்சிலில் இடம்பெற்றுள்ள பஹ்ரைன், குவைத், ஓமன், கத்தார், சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய 6 நாடுகள் இடம்பெற்றுள்ளன.

ஜி.சி.சி., கவுன்சில் மற்றும் இந்தியா இடையிலான தடையற்ற வர்த்தகம் குறித்து விவாதிப்பதற்காக, சவுதி அரேபியாவுக்கான இந்திய துாதர் விபுல் மற்றும் ஜி.சி.சி., அமைப்பின் பொதுச்செயலர் ஜாசெம் முகமது அல்புதை வியுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இரு தரப்பு வர்த்தக உறவுகளை வலுப்படுத்துவது,பேச்சுவார்த்தையை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்வது மற்றும் பிராந்திய மற்றும் சர்வதேச முன்னேற்றங்கள் குறித்தும் விவாதித்தனர்.

ஜி.சி.சி., இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக கூட்டமைப்பாக உள்ளது.

2024 - 25ம் நிதியாண்டில் இந்தியா - ஜி.சி.சி., இடையிலான இருதரப்பு வர்த்தகம் 16,96,320 கோடி ரூபாயாக இருந்தது. இது இந்தியாவின் மொத்த சர்வதேச வர்த்தகத்தில் 15.42 சதவீதம் ஆகும்.

ஜி.சி.சி., நாடுகளுக்கு இன்ஜினியரிங் பொருட்கள், அரிசி, ஜவுளி, இயந்திரங்கள், ரத்தினங்கள், ஆபரணங்கள் உள்ளிட்டவை ஏற்றுமதி செய்யப்படுகின்றன. அங்கிருந்து கச்சா எண்ணெய், எல்.என்.ஜி., பெட்ரோ கெமிக்கல்ஸ், தங்கம் உள்ளிட்டவை இறக்குமதியாகின்றன.

இந்தியாவில் ஜி.சி.சி., நா டுகளின் ஒட்டுமொத்த முதலீடு, 2025 செப்டம்பர் நிலவரப்படி 2,95,830 கோடி ரூபாய்க்கும் அதிகமாக உள்ளது. மேலும், கிட்டத் தட்ட 1 கோடி இந்தியர்கள் வளைகுடா நாடுகளில் வசித்து வருகின்றனர்.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement