கேரள பாரம்பரிய உடையில் வந்த வெளிநாட்டு ராணுவ அதிகாரிகள்; வெலிங்டன் எம்.ஆர்.சி.,யில் ஓணம் பண்டிகை கோலாகலம்

குன்னுார்: குன்னுார் வெலிங்டனில், கேரள பாரம்பரிய உடை அணிந்த வெளிநாட்டு ராணுவ அதிகாரிகள் உட்பட ராணுவ வீரர்களின் ஓணம் திருவிழா கோலாலமாக கொண்டாடப்பட்டது.

நீலகிரி மாவட்டம், குன்னுார் அருகே வெலிங்டன் மெட்ராஸ் ரெஜிமென்ட் சென்டர், நாகேஷ் சதுக்கத்தில், நேற்று ராணுவத்தினரின் ஓணம் திருவிழா கொண்டாடப்பட்டது. ராணுவ வீரர்களால் அமைக்கப்பட்ட பூக்களத்தில், உயர் அதிகாரிகளின் குடும்பத்தினர் விளக்கேற்றினர்.

ஓணம் பாடல்களுடன் திருவாதிரை நடனத்தை ராணுவ வீரர்களின் குடும்பத்தினர் அரங்கேற்றினர்.

புலி நடனம், செண்டை மேளம், சிங்காரி மேளம், வெள்ளம் களி எனும் படகு ஓட்ட அலங்கார வடிவமைப்புடன் ராணுவ வீரர்கள் அசத்தினர்.

விழாவிற்கு, ராணுவ பயிற்சி கல்லுாரி கமாண்டன்ட் லெப். ஜெனரல் மனீஷ் யெரி, எம்.ஆர்.சி., கமாண்டன்ட் பிரிகேடியர் கிருஷ்ணேந்து தாஸ் தலைமை வகித்தனர்.

ராணுவ அதிகாரிகளின் குடும்பத்தினர் கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினர்.

நம் நாடு மட்டுமின்றி இங்கிலாந்து, நைஜீரியா, ஆஸ்திரேலியா, கஜகஸ்தான் பியூஜி உட்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த இளம் ராணுவ பயிற்சி அதிகாரிகள் ஓணம் திருவிழாவில் பங்கேற்றனர். இந்திய கலாசார உடை அணிந்து குடும்பத்தினருடன் வந்த இவர்களுக்கு செண்டை மேளம் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது. மாவேலி, வாமனன் வேடமணிந்தவர்களுடன் அனைவரும் புகைப்படம் எடுத்தனர்.

@block_B@

மாவேலி, வாமனன் நாடகம்...



நாட்டை ஆண்ட மகாபலியிடம், விஷ்ணு, வாமனனாக தோன்றி, 3 அடியில் நிலம் கேட்ட போது, முதல் இரண்டு அடிகளால் பூமியையும், சொர்க்கத்தையும் மூடினார்; மகாபலி மூன்றாவது அடிக்கு தனது தலையை வழங்கியதை மாவேலி, வாமனன் வேடமணிந்த ராணுவ வீரர்கள் தத்ரூபமாக நடித்து காட்டினர்.block_B

Advertisement