மாவட்ட அளவிலான செஸ் போட்டி: வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்  

கள்ளக்குறிச்சி: மாவட்ட அளவிலான செஸ் போட்டியில் வெற்றி பெற்று மாநில போட்டிக்கு தகுதி பெற்ற பள்ளி மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சின்னசேலம், கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், திருக்கோவிலுார், உளுந்துார்பேட்டை, கல்வராயன்மலை, ரிஷிவந்தியம், தியாகதுருகம், திருநாவலுார் ஆகிய 9 வட்டாரத்திற்குட்பட்ட, பள்ளி மாணவ-மாணவிகளுக்கான செஸ் போட்டிகள் கடந்த ஜூலை மாதம் நடந்தன.

ஒவ்வொரு வட்டாரத்திலும் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ, மாணவிகள் மாவட்ட அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றனர்.

இதனையடுத்து சங்கராபுரம் நியூபவர் பள்ளியில் மாவட்ட அளவிலான செஸ் போட்டி 11, 14,17,19 வயதிற்குட்பட்ட, 4 பிரிவுகளின் கீழ் நேற்று முன்தினம் நடந்தது.

சி.இ.ஓ., கார்த்திகா மேற்பார்வையில் நடந்த போட்டியை மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் மோகன் செல்வம் துவக்கி வைத்தார்.

ஒவ்வொரு பிரிவிலும் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ மாணவிகள் என மொத்தம், 24 பேருக்கு சான்றிதழ் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. மேலும், இவர்கள் மாநில அளவிலான செஸ் போட்டிக்கும் தகுதி பெற்றனர்.

நிகழ்ச்சியில் நியூபவர் பள்ளி தாளாளர் துரை தாகப்பிள்ளை, சேர்மன் மணிவண்ணன், பொருளாளர் ரோஜாரமணி, முதல்வர் ஜெயந்தி மார்ட்டின், ரேவதி இளம்பருதி, உடற்கல்வி இயக்குனர்கள் பாலாஜி, பாலகிருஷ்ணன், ஹரிஹரன், வீரமுத்து, பாலுசாமி, இளையராஜா, உடற்கல்வி ஆசிரியர்கள் சங்கர், சேகர், ரமேஷ், ஷீஷர், சாமிதுரை உட்பட பலர் பங்கேற்றனர். மேலும், மாநில அளவிலான செஸ் போட்டி விரைவில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் முதன்முறையாக நடக்கவுள்ளது.

Advertisement