ரூ. 7 ஆயிரம் லஞ்சம் வாங்கிய இன்ஸ்பெக்டருக்கு 2 ஆண்டு சிறை

பெரம்பலூர்: வழக்கு ஒன்றில் விரைவாக குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்ய 7 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய, பெரம்பலூர் இன்ஸ்பெக்டருக்கு இரண்டாண்டு சிறை தண்டனை விதித்து மாவட்ட முதன்மை மற்றும் அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.

கடந்த 2008ம் ஆண்டு பெரம்பலுார் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்தவர் ஜோசப் சிரில். கடந்த 2008 ஆக.,26 ல் ஒரு வழக்கு தொடர்பான குற்றப் பத்திரிக்கையை விரைவாக தாக்கல் செய்வதற்காக, பெரம்பலுாரை சேர்ந்த திருநாவுக்கரசு என்பவரிடம் 7 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியபோது, ஜோசப் சிரிலை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.


இந்த வழக்கு பெரம்பலுார் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சத்தியமூர்த்தி ஜோசப் சிரிலுக்கு இரண்டாண்டு சிறை தண்டனையும், 2 ஆயிரம் ரூபாய் அபராதமும் செலுத்த வேண்டும் என தீர்ப்பு அளித்தார்.
தற்போது, கன்னியாகுமரி மாவட்டத்தில் ஜோசப் சிரில் பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடதக்கது.

Advertisement