பெருவெள்ளத்தை எதிர்த்து நின்ற மாடி வீடு; நேபாள இன்ஜினியருக்கு சபாஷ் போடும் நெட்டிசன்கள்: இணையத்தில் வைரலாகும் வீடியோ!

7

-நமது சிறப்பு நிருபர்-

நேபாள பெருவெள்ளத்தில் சுற்றியுள்ள அனைத்து கட்டடங்களும் அடித்துச் செல்லப்பட்ட நிலையிலும், ஒரே ஒரு மாடி வீடு மட்டும் கம்பீரமாக உறுதியுடன் நின்ற நிகழ்வின் வீடியோ உலகளவில் வைரலாகி வருகிறது.

நேபாளத்தை சூறையாடிய பெருவெள்ளத்தால், கிராமங்களும் வீடுகளும் முற்றிலுமாக அழிந்து, அந்நாடு தத்தளித்து வருகிறது. ஆற்றில் வந்த நீரின் வேகம் மிக அதிகமாக இருந்ததால், வலுவான பல வீடுகளும் பாலங்களும் அடியோடு அடித்துச் செல்லப்பட்டன. நுவாகோட் மாவட்டத்தில் வெள்ளத்தில் அனைத்துக் கட்டடங்களும் அடித்துச் செல்லப்பட்ட போதும், ஒரு மாடி வீடு மட்டும் இடியாமல் கம்பீரமாக நின்றது.

சுற்று வட்டாரப்பகுதிகளில், அந்த மாடி வீட்டில் வசித்து வந்த குடும்பத்தினர் மட்டுமே உயிர் தப்பியுள்ளனர். பால்கனியில் அந்த குடும்பத்தினர் நின்று வெள்ளத்தை அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி உலக அளவில் கவனம் பெற்றது. சுற்றியுள்ள கான்கிரீட் வீடுகள் அனைத்தும் வெள்ளத்தில் சரிந்தபோது, இந்த ஒரு வீடு மட்டும் தப்பியதற்கு அதன் கட்டுமானப் பலமே காரணமாக கருதப்படுகிறது.

நீரோட்டத்தின் திசைக்கு ஏற்பவும், நீரின் அழுத்தத்தைத் தாங்கும் விதத்திலும் இதன் தூண்கள் மற்றும் சுவர்கள் தரமாக அமைக்கப்பட்டு இருக்கிறது. சிமெண்ட் மற்றும் கம்பிகளின் தரம், கலவையின் சரியான விகிதம் ஆகியவை வெள்ளத்தின் இழுவையை தாங்கி கம்பீரமாக நின்றுள்ளது. இது பற்றி பல்வேறு தரப்பினரும் கருத்துக்களை இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர். இந்த வீடியோவை வைரல் செய்து வரும் நெட்டிசன்கள் அந்த வீட்டை கட்டிய இன்ஜினியரை பாராட்டி வருகின்றனர்.

Advertisement