தர்மாபுரி பள்ளியை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் அரசு கொறடா ஆறுமுகம் கோரிக்கை

புதுச்சேரி: பட்ஜெட் மானிய கோரிக்கையின் போது அரசு கொறாடா ஆறுமுகம் பேசியதாவது:

மேட்டுப்பாளையம் சிக்னல் பகுதியில் ஏற்படும் அதிக விபத்துகளை தடுக்க போதுமான காவலர்களை நியமித்து போக்குவரத்தை ஒழுங்குப்படுத்த வேண்டும். எஸ்.பி.,க்களின் பதவி உயர்வு கிடப்பில் உள்ளது. எஸ்.ஐ., பதவியில் இருந்து இன்ஸ்பெக்டர் பதவி உயர்வும் கிடப்பில் உள்ளது.

தர்மாபுரி அரசு உயர்நிலைப் பள்ளியில் 1,000 மாணவர்கள் படிக்கின்றனர். ஆனால், மாணவர்களின் எண்ணிக்கைக்கேற்ப பள்ளியில் இடவசதி இல்லை. எனவே, இப்பள்ளியை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டுமென, 3 ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகிறேன். இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இனியாவது, விசாலமான இடத்திற்கு பள்ளியை மாற்ற வேண்டும்.

பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு மழை கோட் வழங்க வேண்டும். நிலுவையில் உள்ள சென்டாக் நிதி வழங்க வேண்டும். 20 ஆண்டுகளாக ஓவிய ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை. இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேட்டுப்பாளைத்தில் இருந்து ராஜிவ் சிக்னல் வரை கால்வாய் கட்டும் பணியை விரைவில் துவங்க வேண்டும். இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லுாரியை சுத்தமாக பராமரிக்க வேண்டும். கனகன் ஏரியில் துர்நாற்றம் வீசுகிறது. இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 

Advertisement