முதியோர், மாற்றுத்திறனாளிக்கு  ரேஷன் பொருட்கள்

விழுப்புரம்: மாவட்டத்தில் முதியோர், மாற்றுத்திறனாளிகள் வீடுகளுக்கு சென்று பொது வினியோக திட்ட பொருட்கள் வினியோகம் செய்யப்படவுள்ளதாக, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் விஜயசக்தி தெரிவித்துள்ளார்.

அவரது செய்திக்குறிப்பு:

இல்லம் சென்று பொது வினியோக திட்ட பொருட்களை வினியோகிக்கும் திட்டத்தின் கீழ் தமிழகத்தில், 65 வயதிற்கு மேற்பட்ட முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளி ரேஷன் கார்டுதாரர்களின் வீட்டிற்கே சென்று பொது வினியோக திட்ட பொருட்கள் வினியோகம் செய்யப்படுகின்றன.

இந்த திட்டத்தின் கீழ் விழுப்புரம் மாவட்டத்தில், 84,548 பயனாளிகளின் வீடுகளுக்கு மாதந்தோறும் ரேஷன் கடை விற்பனையாளர்கள் வாகனங்களில் பொது வினியோக திட்ட பொருட்களை கொண்டு சென்று, இந்த பொருட்களை தகுதியான பயனாளர்களுக்கு வினியோகம் செய்யப்படுகிறது. 

வரும் 5,6,7 ம் தேதிகளில் இந்த திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு பொது வினியோக திட்ட பொருட்கள் அவர்களின் வீட்டிற்கே சென்று வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மூன்று நாட்களில் பயனாளர்கள் குடிமை பொருட்களை அவர்களின் வீடுகளிலே பெற்று கொண்டு பயனடைய வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement