வண்டல் மண் அள்ளும் வாகனங்கள் ஆய்வு காலக்கெடு நீட்டிக்க விவசாயிகள் கோரிக்கை

ப.வேலுார்:இலவச வண்டல் மண் திட்டத்தில் விதிமீறல்களை தடுக்க, நீர்வளத்துறை மற்றும் வருவாய்த்துறையினர் தீவிர வாகன சோதனையிலும், ஆய்விலும் ஈடுபட்டனர். இலவச வண்டல் மண்ணை அள்ள காலக்கெடுவை நீட்டிக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழக அரசு விவசாயிகள் பயன்பாட்டிற்காக நீர்நிலைகளில் இருந்து இலவச வண்டல் மண் எடுக்க அனுமதி வழங்கியுள்ளது.இதையடுத்து, நீர்வளத்துறை உதவி பொறியாளர் யுவராஜ், ஆய்வாளர் மனோகரன், அலுவலர் அஜித்குமார் ஆகியோர் மற்றும் வருவாய்த்துறையினர், இந்த திட்டத்தின் கீழ் இயக்கப்படும் வாகனங்களை இடும்பன் குளத்தில் தீவிரமாக ஆய்வு செய்தனர்.
இதுகுறித்து, நீர்வளத்துறை அதிகாரிகள் கூறுகையில்:
பரமத்தி, இடும்பன் குளத்தில் விவசாயிகளுக்கு மட்டுமே வண்டல் மண் அள்ள அனுமதிக்கப்படுகிறது. ஆன்லைனில் தாசில்தார் அனுமதி வழங்கிய நாளில் இருந்து, 30 நாட்களுக்குள் மட்டுமே மண்ணை எடுத்துச்செல்ல வேண்டும். நீர்நிலைகளின் கரைகளில் இருந்து பாதுகாப்பான தொலைவில், ஒரு மீட்டர் ஆழத்திற்கு மேல் வண்டல் மண்ணை தோண்டி எடுக்கக் கூடாது. மேலும் பரமத்தி, இடும்பன் குளத்தில் இருந்து வண்டல் மண் விவசாயிகளுக்கு மட்டுமே பயன்படுத்துவது குறித்து உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதுதொடர்பாக, இடுமன்குளம் ஏரி நீர் பாசன விவசாய சங்க தலைவர் நடராஜன், பொருளாளர் பெரியசாமி கூறியதாவது:
பரமத்தி, இடுமன்குளம் ஏரி நீர் நிலைகளில் உள்ள வண்டல் மண்ணில், அதிகமாக இயற்கை வளமிருக்கும். எனவே தான், அதை விவசாயிகளுக்கு இலவசமாக அரசு கொடுக்கிறது. அதோடு, நீர்நிலைகளும் துார்வாரியதுபோல் ஆகிவிடும். இதனால் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள விவசாயிகளுக்கு மிகுந்த பயனுள்ளதாக
உள்ளது. டிராக்டர் அல்லது மாட்டு வண்டியில்தான் அள்ள வேண்டும். விதிகளை மீறி, வணிக நோக்கத்திற்காக மண் அள்ளும் தனி நபர்களை இடும்பன் குளத்தில், விவசாயிகள் சங்கம் சார்பாக அனுமதிப்பதில்லை. இலவச வண்டல் மண்ணை அள்ள காலக்க்கெடுவை நீட்டிக்க, மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை வைத்துள்ளோம்.
இத்திட்டத்தை செயல்படுத்தும் தமிழக அரசுக்கும், அரசு அதிகாரிகளுக்கும், விவசாயிகள் சங்கம் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் என தெரிவித்தார். ஆய்வின்போது விவசாயிகள் சங்க நிர்வாகிகள் மற்றும் விவசாயிகள் உடனிருந்தனர்.

Advertisement