காலி குடங்களுடன் அதிகாரிகளிடம் மனு

நாமக்கல்:போதிய குடிநீர் கிடைக்காததால், ப.வேலுார் அடுத்த பஞ்சபாளையம் கிராம மக்கள் காலி குடங்களுடன் சென்று, நாமக்கல் கலெக்டர் மதுபாலனிடம் மனு அளித்தனர்.
இதுகுறித்து, அந்த மனுவில் கூறியிருப்பதாவது: ப.வேலுார் தாலுகா, கபிலர்மலை அடுத்த இருகூர் கிராமம், பஞ்சபாளையம், புதுக்காலனியில், 25 குடும்பங்களை சேர்ந்த நுாற்றுக்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறோம். எங்கள் பகுதிக்கு, ஆறு மாதங்களாக தண்ணீர் வராமல் உள்ளது. ஒரு வீட்டுக்கு ஒரு குடம் தண்ணீர் கிடைப்பதே மிகவும் கஷ்டமாக உள்ளது. மேலும், தண்ணீர் எடுக்க இரண்டு மற்றும் மூன்று கிலோ மீட்டர் துாரம் சென்று விவசாய கிணற்றில் இருந்து தண்ணீர் எடுத்து வரும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து பஞ்சாயத்து அலுவலகம், பி.டி.ஓ., அலுவலகங்களில் தொடர்ந்து மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே, எங்கள் பகுதிக்கு உடனடியாக குடிநீர் வழங்கவும், அடிப்படை வசதி செய்து தரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement