சிவகாசி வாலிபர் நெல்லையில் மர்ம மரணம்

திருநெல்வேலி: தாழையூத்து அருகே குளத்தில் சிவகாசி வாலிபர் உடல் மீட்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி, செங்கமல நாச்சியார்புரத்தை சேர்ந்த முத்தையா மகன் ஆனந்த் 34. இவர் துாத்துக்குடியில் தனியார் நிறுவனத்திற்கு வேலை விஷயமாக செல்வதாக கூறி ஆக., 28ல் வீட்டில் இருந்து சென்றுள்ளார்.

அன்று மாலை தந்தையிடம் போனில் பேசிய ஆனந்த், திருநெல்வேலிக்கு வந்துள்ளதாகவும், சந்திப்பில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் தங்கியுள்ளதாகவும், வேலை முடிந்ததும் வீட்டிற்கு வருவதாகவும் தெரிவித்துள்ளார். மறுநாள் ஆனந்த் போனை எடுக்காததால், திருநெல்வேலி வந்த முத்தையா மகனை தேடியுள்ளார். பின்னர் தச்சநல்லுார் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார்.

இந்நிலையில், தாழையூத்து கட்டுடையார் குடியிருப்பு குளத்தில் ஆனந்த் இறந்த நிலையில் உடல் மீட்கப்பட்டது. அங்கு சென்ற முத்தையா, வலது கையில் இருந்த மோதிரம் மற்றும் கயிறு ஆகியவற்றை வைத்து இறந்தது ஆனந்த் என்பதை உறுதி செய்தார். ஆனந்த் கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு காரணத்தால் இறந்தாரா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement