உலக தேங்காய் தினம் கடைபிடிப்பு தென்னங்கன்று நட்டு விழிப்புணர்வு

ஈரோடு:உலக தேங்காய் தினத்தை முன்னிட்டு, ஈரோடு கலெக்டர் அலுவலக வளாகத்தில் தென்னங்கன்று நடும் நிகழ்ச்சி நடந்தது. ஆண்டு தோறும் செப்., 2ல் உலக தேங்காய் தினம் கடைபிடிக்கப்படுகிறது.

தேங்காய் சாகுபடியின் முக்கியத்துவம், தேங்காய் சார்ந்த தொழில்களின் வளர்ச்சி, விவசாயிகளின் வாழ்வாதார மேம்பாடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் இத்தினம்
கடைபிடிக்கப்படுகிறது. தேங்காய், இளநீர், தேங்காய் பால், தேங்காய் எண்ணெய், நார், ஓடு என மனித வாழ்வுக்கான பயன்பாடுகளை தருகிறது. உணவு பொருட்கள் தயாரிப்பு, மருத்துவம், அழகு சாதன பொருட்கள், கைத்தொழில், ஏற்றுமதி துறைகளில் தேங்காய் முக்கிய பங்காற்றுகிறது.
கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் கந்தசாமி, தென்னங்கன்றை நட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மாவட்ட வேளாண் இணை இயக்குனர் சிவகுமார், தோட்டக்கலை துணை இயக்குனர் குருசரஸ்வதி உட்பட விவசாயிகள் பங்கேற்றனர்.

Advertisement