கலெக்டர் அலுவலகத்தில் தர்ணாவில் ஈடுபட்ட மாநகராட்சி பணியாளர்கள்

ஈரோடு:ஈரோடு மாநகராட்சி அனைத்து கூலி பணியாளர் தொழிற்சங்கம் சார்பில், ப.செ. பார்க்கில் உள்ள முன்னாள் முதல்வர்கள் சிலை முன்பாக ஆர்ப்பாட்டம் நடந்தது.
சங்க தலைவர் லெனின் கதிரவன் தலைமை வகித்தார். இதில் துாய்மை பணி, டி.பி.சி., உட்பட பல்வேறு பிரிவுகளில் பணியாற்றும், 300க்கும் மேற்பட்ட பணியாளர்கள் கலந்து கொண்டனர். அப்போது, பல ஆண்டுகளாக பணியாற்றி வரும் துாய்மை பணியாளர்கள், மேஸ்திரிகளை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். இ.எஸ்.ஐ., பி.எப்., மற்றும் மருத்துவ பாதுகாப்பு, விடுப்பு, பாதுகாப்பு உபகரணங்கள், விபத்து நிவாரணம் மற்றும் சமூக பாதுகாப்பு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
பின்னர் பார்க்கில் இருந்து புறப்பட்டு, ஜி.எச். ரவுண்டானா, பெருந்துறை ரோடு வழியாக கலெக்டர் அலுவலகம் நோக்கி பேரணி சென்றனர். அங்கிருந்த அதிகாரிகள் கூட்டமாக உள்ளே செல்ல அனுமதி மறுத்ததால், கலெக்டர் வாகனத்தின் அருகில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் போலீசார் பேச்சுவார்த்தையை தொடர்ந்து, சங்க முக்கிய நிர்வாகிகள் கலெக்டர் கந்த
சாமியை நேரில் சந்தித்து மனு அளித்தனர். கோரிக்கை தொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாக, கலெக்டர் உறுதியளித்ததை தொடர்ந்து கலைந்து சென்றனர்.

Advertisement