புதுச்சேரி மாணவர்கள் உலகிற்கே தீர்வுகளை தர முடியும் :ஐ.சி.டி., அகாடமி மாநாட்டில் கவர்னர் நம்பிக்கை

புதுச்சேரி: ஐ.சி.டி., அகாடமியின் பிரிட்ஜ் 72வது மாநாடு ஆனந்தா இன் மாநாட்டு அரங்கில் நேற்று நடந்தது.

இந்தியாவின் ஏ.ஐ., கல்வி பொருளாதார தலைமையத்துவம் என்ற தலைமையில் நடந்த இம்மாநாட்டினை கவர்னர் கைலாஷ்நாதன் துவக்கி வைத்து பேசியதாவது:

புதுச்சேரியை பொறுத்தவரை, பல்கலைக்கழகங்கள், பொறியியல் கல்லுாரிகள், மருத்துவ நிறுவனங்கள், ஆராய்ச்சி மையங்கள், தொழிற்கல்வி கல்லுாரிகள் மற்றும் துடிப்பான மாணவர் சமூகம் நம்மிடம் உள்ளன.

கல்வி நிறுவனங்கள், அரசுத் துறைகள், தொழில்துறை மற்றும் ஸ்டார்ட்அப் சூழல் அமைப்பு ஆகியவற்றிற்கு இடையே வலுவான இணைப்புகளை உருவாக்குவதே நமது இலக்காக இருக்க வேண்டும்.

மாணவர்களால் பொது சுகாதாரம், கழிவு மேலாண்மை, சுற்றுலா, மீன்வளம், விவசாயம், போக்குவரத்து மேலாண்மை மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை ஆகியவற்றிற்கு ஏ.ஐ., மூலமாக தீர்வுகளை உருவாக்க முடியும்.

நமது மாணவர்கள் புதுச்சேரி மட்டுமின்றி இந்தியாவுக்கும் உலகிற்கும் தீர்வுகளை உருவாக்க முடியும். நமது மாணவர்களை வெறும் எதிர்கால வேலை தேடுபவர்களாக மட்டும் நாம் நினைக்கக் கூடாது. அவர்களை எதிர்கால வேலை வழங்குநர்களாக, ஆராய்ச்சியாளர்களாக, கண்டுபிடிப்பாளர்களாக, தொழில்முனைவோராக, கொள்கை வகுப்பாளர்களாக மற்றும் உலகளாவிய தலைவர்களாக பார்க்க வேண்டும்.

இந்தியா உலகில் உள்ள நாடுகளுக்கு மனிதவளத்தை அனுப்பும் பின்புற அலுவலகமாக மட்டும் இருக்கக் கூடாது. உலகின் மிகப்பெரிய கண்டுபிடிப்பு மையங்களில் ஒன்றாக மாற வேண்டும். 2047-ன் இந்தியா உலகளாவிய அறிவு வல்லரசாக இருக்க வேண்டும். படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கித் தருவதற்கான சாத்தியக்கூறுகளை இந்த மாநாடு ஆராய வேண்டும்' என்றார்.

விழாவில் மெட்ராஸ் மேனேஜ்மென்ட் அசோசியேஷன் நிர்வாக இயக்குநர் விஜயகுமார், தக் ஷசீலா பல்கலைக்கழக வேந்தர் தனசேகரன், ஆச்சார்யா கல்வி நிறுவனங்களின் தலைவர் அரவிந்தன், ஐ.சி.டி,., அகாடமி தலைமை நிர்வாக அதிகாரி ஸ்ரீகாந்த், இஸ்ரோ மூத்த விஞ்ஞானி புரு ேஷாத்தமன் உள்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement