தங்கம் வெல்ல ஷீத்தல் தேவி 'ரெடி': உலக 'பாரா' வில்வித்தை ஆரம்பரம்

ஆமதாபாத்: உலக பாரா வில்வித்தை இன்று இந்தியாவில் துவங்குகிறது. இதில், இந்தியாவின் ஷீத்தல் தேவி, சாதிக்க காத்திருக்கிறார்.
இந்தியாவில் முதன் முறையாக உலக வில்வித்தை பாரா சீரிஸ் (ஸ்டேஜ் 3) இன்று ஆமதாபாத்தில் துவங்குகிறது. இந்தியா, சீனா, இங்கிலாந்து உட்பட 19 நாடுகளில் இருந்து 109 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.
காம்பவுண்டு, ரீகர்வ் உட்பட 7 பிரிவுகளில் 7 தனிநபர், தலா 3 இரட்டையர், கலப்பு இரட்டையர் போட்டிகளில் தங்கப்பதக்கம் வழங்கப்பட உள்ளன. ஆசிய பாரா விளையாட்டுக்கு (அக். 18 முதல் 24 வரை) முன், இத்தொடர் சிறந்த பயிற்சியாக அமைய உள்ளது. இந்தியா சார்பில் 29 பேர் கொண்ட அணி களமிறங்குகிறது.
ஷீத்தல் நம்பிக்கை
இதில், நடப்பு உலக சாம்பியன், உலகின் 'நம்பர்-1' (காம்பவுண்டு பிரிவு) வீராங்கனை, ஷீத்தல் தேவி 19, இடம் பெற்றுள்ளார். பிறக்கும் போதே இரு கைகள் இல்லாத ஷீத்தல், வலது கால், தோளில் 'பேலன்ஸ்' செய்து, வாயினால் அம்பு எய்து இலக்கை துல்லியமாக தாக்கி அசத்துகிறார்.
கடந்த 2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் சக வீரர் ராகேஷ் குமாருடன் இணைந்து வெண்கலம் கைப்பற்றிய ஷீத்தல், ஒலிம்பிக் பதக்கம் வென்ற இளம் இந்திய வீராங்கனை (17 வயது) ஆனார்.
2025ல் பாரா வில்வித்தையில் தங்கம் வென்ற, இரு கைகள் இல்லாத முதல் வீராங்கனை என சாதனை படைத்துள்ளார். கடந்த ஜூன் மாதம் நடந்த பாரா சிரீஸ் (ஸ்டேஜ் 2), தகுதிச்சுற்றில் 700க்கு 697 புள்ளி எடுத்து ஆசிய சாதனை படைத்துள்ளார். இந்த அசத்தல் 'பார்ம்' தொடரும் பட்சத்தில் சொந்தமண்ணிலும் தங்கம் கைப்பற்றலாம்.
ஆண்கள் பிரிவில் உலகின் 'நம்பர்-1', நடப்பு சாம்பியன் தோமன் குமார், ராகேஷ் குமார், ரீகர்வ் பிரிவில் ஹர்விந்தர் சிங் களமிறங்குகின்றனர்.
தவிர, உலகின் 'நம்பர்-1', செக் குடியரசின் சர்கா பல்டர் முசிலோவா, பார்வை குறைபாடுள்ள பிரிவில் சைப்ரசின் கிறிஸ்டாஸ் மிசோஸ் உள்ளிட்டோர் சவால் தரலாம்.

Advertisement