ஸ்ரீவில்லிபுத்தூர் மலையில் 3 நாளாக எரியும் காட்டுத்தீ : வனத்துறையினர் திணறல்

ஸ்ரீவில்லிபுத்துார்:விருதுநகர் ஸ்ரீவில்லிபுத்துார் செண்பகத் தோப்பு மேற்கு தொடர்ச்சி மலையில் பிடித்த காட்டு தீ, மூன்றாவது நாளாக நேற்றும் எரிந்தது. தீயை அணைப்பதில் வனத்துறையினர் கடும் சிரமத்தை சந்தித்து திணறி வருகின்றனர்.

ஸ்ரீவில்லிபுத்துார் செண்பகத் தோப்பு காட்டழகர் கோயில் பீட்டு வனப்பகுதியில்,

இரு நாட்களுக்கு முன்பு காட்டுத்தீ பிடித்து புகை மூட்டம் ஏற்பட்டது. இரவில் மிகவும் அதிகமாக தீ கொழுந்து விட்டு எரிந்ததை பல கிலோமீட்டர் சுற்றளவிற்கு உள்ள மக்கள் பார்க்க முடிந்தது.

இந்நிலையில் இரண்டாம் நாளன்று கான்சாபுரம் மலைப்பகுதிக்கு காட்டு தீ பரவியது. இதனை அணைக்கும் பணியில் 30க்கும் மேற்பட்ட வனத்துறையினர் இரவு மலையில் தங்கி மிகுந்த சிரமத்திற்கு மத்தியில் அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

ஆனாலும் தீயின் வேகம் அதிகரித்து மலை உச்சி வரை கொழுந்து விட்டு எரிந்து ராஜபாளையம் ராக்காச்சி அம்மன் கோவில் மலைப்பகுதிக்கு திசை திரும்பியது. கரடு முரடான பாதைகளை கொண்ட இந்த மலைப்பகுதிக்கு செல்வதில் வனத்துறையினர் மிகுந்த சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.

இதனால் மூன்றாவது நாளான நேற்று காலையில் புகைமூட்டம் அதிக அளவில் காணப்பட்டது. அரியவகை மூலிகைகள், வனவிலங்குகள் பாதிக்கப்பட்டன.

இருந்தபோதிலும் 40க்கும் மேற்பட்ட வனத்துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். வனவிலங்குகள் உயிருக்கு ஆபத்து இல்லை, வனத்துறை சார்பில் வைக்கப்பட்டுள்ள தகவல் தொடர்பு சாதனம் பாதிக்கப்படவில்லை என துணை இயக்குனர் ரவி மீனா கூறினார்.

Advertisement